காங்கிரஸின் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும்… நிர்மலா சீதாராமன்
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
பொய்கள் நிறைந்தது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாட்டை துண்டாடுவதாக உள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
தேர்தல் வந்துட்டா போதும்.. சின்ராசுகள் டீ குடிக்கக் கிளம்பி விடுகிறார்கள்!
தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும்
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகளுக்கு சாதகமாக உள்ளது. தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.
எதிரானவர்கள் அல்ல
ராணுவத்தின் நம்பிக்கையை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது, ஆயுதப்படை சட்டத்தை அகற்றுவதில் சில விதிமுறைகள் உள்ளன. இதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
காங்கிரசுக்கு கேள்வி
பிரதமர் நரேந்திர மோடி அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து மேகாலயா, திரிபுரா, மற்றும் அசாமின் பெரும்பகுதியில் இதை அகற்றியுள்ளது. ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இருந்த காங்கிரஸ் அரசு எத்தனை மாநிலங்களில் ஆயுதப்படை சட்டத்தை அகற்றி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
ஆச்சரியமாக உள்ளது
காங்கிரஸின் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் கூறினார். புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களை தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார். ஆனால் அதுகுறித்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாதது ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.