இந்துத்துவா எதிர்ப்பு எது? தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி
டெல்லி: இந்துத்துவா எதிர்ப்பு எது என்பதில் போதுமான தெளிவு இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக ராகுல் காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளால்தான் காங்கிரஸ் மீது வாக்காளர்களுக்கு நம்பி இல்லாமல் போனதற்கு காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தேசிய அளவில் எதிர் எதிர் துருவங்கள்தான் காங்கிரஸும் பாஜகவும். காங்கிரஸ் கட்சி மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. பாஜகவோ இந்துத்துவா கொள்கையை வலியுறுத்துகிறது.
இந்துத்துவா கொள்கை என்பது வேறு- இந்துவாக இருத்தல் என்பது வேறு. இந்த இரண்டையும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட மாநிலம் தமிழகம். இதற்கு அடிப்படை காரணம் தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம்.
25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!
இந்துத்துவா எதிர்ப்பு
திமுக கூட்டணி இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றதும் கூட திராவிடர் இயக்கத்தின் பேர்சொல்லும் பிள்ளையாக அக்கட்சி இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான். அந்த அணியில் இந்துத்துவாவை பகிரங்கமாக எதிர்த்து பேசும் மதிமுக, விடுதலை சிறுத்தைகளும் பேச்சளவிலாவது இந்துத்துவா கொள்கைகளை தமிழகத்தில் எதிர்க்கும் இடதுசாரிகளும் இருந்ததும் கூடுதல் நம்பிக்கைக்குக் காரணம்.
இந்துவாக காட்டிக் கொள்ளுதல்
ஆனால் ராகுல் காந்தி புரிந்து கொண்ட இந்துத்துவா எதிர்ப்பு என்பது தம்மை ஒரு இந்துவாக காட்டிக் கொண்டாலே பாஜகவுக்கு அடிவிழும் என்பது மட்டும்தான். இதனை குஜராத் சட்டசபை தேர்தலில் செய்து காட்டினார். அம்மாநிலத்தில் கோவில் கோவிலாக போய் வழிபாடு நடத்தினார். அங்கு கணிசமான வெற்றி கிடைத்தது.
ராகுலின் அர்த்தமற்ற புரிதல்
அதையே தமது இந்துத்துவா எதிர்ப்பு அதாவது பாஜகவை சமாளிக்கும் வழி என்கிற அர்த்தமற்ற புரிதலை கொள்கையாகவே கொண்டார். இங்குதான் ராகுல் காந்தி செய்த அடிப்படை பிழை. மத்திய பிரதேசத்திலும் இதே நாடகங்களை நடத்தி வென்றதால் இந்த பாணி போதும் என முடிவு செய்திருக்கிறார் ராகுல். ஆனால் தற்போது வாக்காளர்களிடம் இது எடுபடவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
இந்துத்துவா எதிர்ப்பு அரசியல்
அத்துடன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும் மமதா பானர்ஜி மூர்க்கமாகவே பாஜகவை எதிர்க்கக் கூடியவர். மாயாவதி, அகிலேஷ் ஆகியோரும் பாஜகவை பிரதான எதிரிகளாக கொண்டு களத்தில் நிற்கின்றனர். இப்படி பாஜகவை முற்று முழுதாக எதிர்த்து களத்தில் நிற்ககக் கூடிய அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டி ‘இந்துத்துவா' எதிர்ப்பு அரசியலை தேசிய அளவில் தீவிரமாக கையில் எடுத்திருக்க வேண்டிய பொறுப்பு ராகுல் வசம் இருந்தது.
இந்துத்துவா எதிர்ப்பு அரசியல்
ஆனால் மோடி எதிர்ப்பு; கோவில்களுக்கு போவது, பொதுக்கூட்டங்களில் பேசுவது என்பது மட்டும் ராகுலின் 'கொள்கை' பாணியாக இருந்தது. அதனால்தான் ஆகப் பெரும் தோல்வியை ராகுல் சுமந்து கொண்டிருக்கிறார். இந்து என்றால் என்ன? இந்துத்துவா எதிர்ப்பு என்றால் என்கிற பால பாடத்தை இனியாவது ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு வியூகம் வகுத்தால்தான் ராகுல் காந்தி என்கிற 'சோ கால்ட் ஆளுமைக்கு' எதிர்காலம் உண்டு.