காங்கிரஸின் "சர்ஜிகல் ஸ்டிரைக்".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு!
டெல்லி: 2016 சர்ஜிகல் ஸ்டிரைக் நாயகரான ராணுவ கமாண்டர் டி.எஸ். ஹூடா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஒரு குழுவை அமைத்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை இந்த குழு ஆராய்ந்து ராகுல் காந்தியிடம் அறிக்கை அளிக்கும்.
பாஜகவை அதிர வைத்துள்ளது ராகுல் காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கை. டி.எஸ். ஹூடாதான், 2016ல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட இந்தியப் படையினரை வழி நடத்தியவர் ஆவார். தற்போது இவர் ஓய்வு பெற்று விட்டார். இவரை இப்போது காங்கிரஸ் கட்சி வளைத்து விட்டது.
2016ம் ஆண்டு யூரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 19 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய அரசு, பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து விமானப்படை உதவியுடன் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டது. அதில் 50க்கும் மேற்பட்டோரை கொன்றதாக பின்னர் இந்தியா அறிவித்தது.
Congress President @RahulGandhi met with Lt Gen DS Hooda (retd) to institute a task force on National Security which will prepare a vision paper for the country. Gen Hooda will lead the task force & work with a select group of experts. pic.twitter.com/06zfIjfbeJ
— Congress (@INCIndia) February 21, 2019
இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டது அதுவே முதல் முறையாகும் என்பதால் அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஹூடா காங்கிரஸ் பக்கம் வந்துள்ளார். ஹூடா தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழு 30 நாட்களில் தனது அறிக்கையை ராகுல் காந்தியிடம் அளிக்கும்.
பின்னர் ஹூடா கூறுகையில், தேசிய பாதுகாப்பில் ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை என்று பாஜக கூறுவது தவறானதாகும். நாட்டின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை, கவலையில் உள்ளார் ராகுல் காந்தி. அதனால்தான் இந்த குழுவையே அவர் நியமித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு முன்பே திட்டமிடப்பட்டது இந்தக் குழு.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதை எனது குழு வகுத்துக் கொடுக்கும். இதை வெளிப்படையாக வெளியிட்ட பின்னர் அனைவருமே இதுகுறித்து விவாதிக்கலாம். யோசனைகளைத் தெரிவிக்கலாம். அதற்கேற்ப குழு தனது முடிவுகளை மறு பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளது.
தீவிரவாதிகள் முன்பு போல இல்லை. தற்கொலைப் படையினர் அதிகரித்து விட்டனர். வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பித் தாக்குவதும் அதிகரித்துள்ளது. அந்த கோணத்தில்தான் நாம் நமது தற்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டும் என்றார் ஹூடா.