காங்கிரஸுடன் கை கோர்க்கும் ஹர்திக் படேல்.. பாஜகவுக்கு காத்திருக்கும் குடைச்சல்!
Recommended Video
டெல்லி: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸுடன் ஹர்திக் படேல் கை கோர்த்திருப்பதால் பாஜகவுக்கு பெரும் சிக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை வகுத்துவரும் காங்கிரஸ் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளது. அந்த வகையில் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க அந்த மாநிலத்தில் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய ஹர்திக் பட்டேலை தங்கள் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது.
பட்டேல் இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறித்தி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். இளைஞரான இவரது போராட்டம் குஜராத்தை ஸ்தம்பிக்க வைத்ததோடு நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தின் மூலமாக குஜராத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்த ஹர்திக் படேல் கடந்த முறை குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றபோது காங்கிரசுக்கு ஆதரவளித்தார்.
2017 –ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் வென்றது சுயேச்சைகள் 6 இடங்களில் வென்றனர். இந்த தேர்தலில் பெருநகரம் மற்றும் புறநகர் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் பாஜகவுக்கு கிடைத்தன ஆனால் கிராமப்புற மக்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்தன. இதில் படேலின் பங்களிப்பும் பெருமளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹர்திக் படேல் குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். அவர் கட்சி எதுவும் ஆரம்பிக்காத நிலையில் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது. இதனால் ஹர்திக் படேல் ஜாம் நகர் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சுயேச்சையாக களம் இறங்கினால் தனக்கு வெற்றி கிடைக்குமா என்று ஹர்திக் சந்தேகப்படுகிறார். இதனால் காங்கிரசில் இணைந்து தேர்தலை சந்திக்கும் முடிவில் உள்ளார் ஹர்திக்.
வரும் 12 ம் தேதி ராகுல் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்கிறார். அப்போது அவரை சந்திக்க திட்டம் வைத்துள்ளார் ஹர்திக். அவரை சந்திக்கும்போது அப்போதே கட்சியில் ஹர்திக்கும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த தொகுதி கிடைக்கும்.. திமுகவுடன் நாளை பேசப் போகிறோம்.. அழகிரி தகவல்
குஜராத்தில் படேல் இன மக்களின் வாக்குவங்கி தேர்தலில் பெரும்பங்கு வகிக்கும். ஹர்திக் காங்கிரசில் இணையும் பட்சத்தில் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஜாம் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு காங்கிரசுக்கு இதன்மூலம் பெரும் பலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக்கும் காங்கிரசும் இணைவது பாஜகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.