காங்கிரசில் மாற்றம் வருகிறது.. செயல்படாத மூத்த தலைவர்களுக்கு டாட்டா... இளைஞர்களுக்கு வாய்ப்பு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்று தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து, கட்சித் தலைவர் பதவியே ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததால், அந்த முடிவை ராகுல் காந்தி கைவிட்டதாக தகவல் வெளியானது.
மோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன!
விளைவுகள்
தேர்தல் தோல்விக்கு காரணம், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அடிமட்ட தொண்டன் வரை எடுத்து செல்லாதது. சரியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பை தவற விட்டது. ராகுல் காந்தி தான், பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிலை படுத்தாதது. மோடி அரசின் திட்டங்களால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி, மக்களின் முன் சரியாக எடுத்து வைக்காதது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
பழமையான கட்சி
காங்கிரசில், அடித்தட்டு மக்கள் வரை செல்லும் கட்டமைப்பு இல்லை. காங்கிரஸ் என்றால் அது பழமையான கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இனையதளத்தை முழுமையாக பயன்படுத்தி, கட்சியின் வரலாறு, கொள்கைகள், சாதனைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும் இது போன்ற சில விஷயங்களை சரிசெய்திருந்தாலே போதும், பாஜக வெற்றியில் 50 சதவீதத்தை தடுத்து இருக்காலம் என்றும் பலர் தங்களது கருத்துகளை கூறினர்.
வாரிசுகளுக்கு சீட்
நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மாநில தலைவர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என ராகுல்காந்தி சாடினார். குறிப்பாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்ததாகவும், அவர்கள் கட்சிக்காக சரியாக உழைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி ஆவேசப்பட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
அதோடு பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததாக கட்சி தலைமை கருதுகிறது. இந்தநிலையில், தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல்காந்தி, டெல்லி திரும்பியதும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.