காங்கிரஸ் கட்சிக்குள் சின்ன தலை பெரிய தலை சச்சரவு, வேடிக்கை பார்க்கிறதா தலைமை!!
சென்னை: மாநில காங்கிரஸ் கட்சி வலுவிழக்கிறதா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் இளைஞர்கள் அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதுதான். இதற்கு என்ன காரணம். தலைமை இவர்களது பிரச்சனைகளை கூர்ந்து கவனிப்பது இல்லையா அல்லது மூத்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்குப் பின்னர் யார் வழி நடத்துவது என்ற சிக்கல் எழுந்தபோது, சோனியா காந்தி ஒதுங்கியே இருந்தார். பின்னர் அவரது கையில் தலைமை பொறுப்பு திணிக்கப்பட்டது. அவரும் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார். அவரது தலைமையில் கட்சி தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தது.
பின்னர், தலைமையை தனது மகன் ராகுல் காந்தி கைக்கு மாற்றினார். ராகுலும் பிரதமர் மோடி மீதும் பாஜக மீதும் கடுமையாக விமர்சனங்கள் வைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கும், ராகுலுக்கும் இடையிலான தேர்தலாகவே பார்க்கப்பட்டது. பாஜக மோடி தலைமையில் தனித்தே 303 இடங்களை பிடித்து இருந்தது. காங்கிரஸ் வெறும் 52 இடங்களை பிடித்து இருந்தது.
தேர்தல் மோடிக்கும், ராகுலுக்கும் இடையே பேசப்பட்டு பெரிய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இவற்றில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. பாஜக பின்னடைவை சந்தித்தது. இந்த மூன்று மாநிலங்களும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைக்கு சென்றது.
தகுதி நீக்க நோட்டீஸ்.. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் மனு.. இன்று விசாரணை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2005ஆம் ஆண்டில் இருந்து பாஜக ஆட்சியில் இருந்தது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை. முதல்வராக இருந்த கமல் நாத்துக்கும், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. இந்த சிக்கலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. பாஜகவுக்கு தனது ஆதரவாளர்களுடன் ஜோதிராதித்யா சென்றார். தலைமை மேற்கொண்ட சமாதானம் கைகொடுக்கவில்லை.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்கள் இடையே தன்னை நன்றாக அடையாளப்படுத்திக் கொண்ட ஜோதிராதித்யாவை தலைமை விட்டுக் கொடுத்தது தவறு என்ற கோணத்தில் இன்றும் பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துவக்கத்தில் இருந்து உழைத்தவர் கமல் நாத் என்ற அடையாளத்துடன் தலைமை அங்கீகாரம் அளித்தது. வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.களுக்குள் சிறு தேர்தலை நடத்தியது. இதில் கமல் நாத்துக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. அதன் அடிப்படையில் தலைமையும் கமல் நாத்தை ஆதரித்தது. தலைமை இருதரப்பையும் சமமாக நடத்தியது.
அசத்தல்.. கொரோனா பாதிப்பை தாண்டி எழுந்து வரும் இந்தியா.. குவியும் சர்வதேச பெரு நிறுவன முதலீடுகள்!
சிறிய வயதில் ஜோதிராதித்யாவுக்கு கட்சி அங்கீகாரம் அளித்து இருந்தது. கட்சிக்குள் குழப்பம் இருக்க வேண்டாம் என்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலின்போது, ஜோதிராதித்யாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கும் காங்கிரஸ் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும், ஜோதிரதித்யாவை தலைமை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதேதான் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் நடந்தது. அங்கும் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்து கட்சியால் நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது.
இவர்கள் இருவருமே சிறு வயதில் கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய பொறுப்புக்கு வந்தவர்கள். அவர்களது உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டது. மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தனர். முதல்வராக வேண்டும் என்பது சச்சின் ஆசை. அப்போதும் எம்.எல்.ஏ.களின் ஆதரவு யாருக்கு என்று தலைமை கணக்கு எடுத்தது. வெற்றி பெற்ற 100 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 60 பேரின் ஆதரவு அசோக் கெலாட்டுக்குத்தான் இருந்துள்ளது. அதன் அடிப்படையில் கெலாட் முதல்வரானார்.
மாநிலத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் மூத்தவர்கள், இளையவர்கள் என்ற இடைவெளி பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இதை கட்சியால் இணைக்க முடியவில்லை. இதற்கிடையே வாரிசு யுத்தம் வேறு நடந்துவருகிறது.
பொதுவாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் அந்தந்த மாநில முதல்வரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அந்த மாநில நிர்வாகிகளும் முதல்வரின் கைக்குள் சென்று விடுகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவரும் முதல்வரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறார். கட்சியை நடத்துவதற்கு பணம் தேவை. இதுவும் முதல்வரின் கைக்கு சென்று விடுகிறது. இங்கு டெல்லி தலைமை குறுக்கிட முடியாத சூழல் ஏற்படுகிறது. முன்பு மொத்த அதிகாரமும் மத்தியில் குவிந்து இருந்தது. இப்போது அப்படி இல்லை. மாநிலக் கட்சிகளே தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். இங்குதான் பிரச்சனை எழுகிறது. மொத்த அதிகாரமும் முதல்வரின் கைக்கு சென்று விடுகிறது.
இதன் அடிப்படையில்தான் ஜோதிராதித்தியாவும், சச்சினும் வெளியே சென்றனர். ஜோதிராதித்யா குடும்பத்துக்கு ஆர்எஸ்எஸ் என்ற பின்பலம் இருந்தது. ஆதலால், அவர் அங்கு சென்றார் என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், சச்சின் அதுமாதிரி கிடையாது. முழுக்க முழுக்க அவரது தந்தை காங்கிரஸ் கட்சிக்குள் எத்தனை இடையூறு வந்தபோதும் வெளியேறவில்லை. தனக்கு என்று அங்கீகாரத்தை பெற்றவர்.
சோனியா தலைமையை எதிர்த்தவர் என்றாலும், கட்சியில் இருந்து வெளியேறவில்லை. ஆனால், இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் சச்சின் தலைமை குறித்து எந்த தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவில் இணைய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அப்படி என்றால் தனக்கு இருக்கும் ஆதரவாளர்களுடன் பாஜக பலத்தில் ஆட்சி அமைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராகுல் தலைமை பொறுப்பில் இருந்து இறங்கிய பின்னர் தனக்கு அவமானங்கள் நேர்ந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சோனியா காந்தி ஏற்கும்போது, சர்ச்சை எழுந்தது. சரத் பவார் போன்றவர்கள் எதிர்த்தனர். சோனியா தனது ஆளுமையை காட்டிய பின்னர், தலைவர்கள் அனைவரும் அவர் பின்னணியில் அணி கோர்க்க துவங்கினர். இதுதான் மனிதனின் குணமும். ஆனால், இன்று தலைமை வீக்காக இருக்கிறது. ஆதலால், இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளைஞர்களும் இனி காங்கிரஸ் கட்சியில் இருப்பது நமக்கு ஆதாயம் இல்லை என்ற எண்ணத்தில் கட்சி தாவுகின்றனர். ராகுல் காந்தியும் கட்சியில் மூத்தவர்களின் அழுத்தத்தை முன்பு குறிப்பிட்டு இருந்தார்.
கட்சியின் தலைமை பொறுப்புக்கு ராகுல் வந்த பின்னர், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவர் ராஜினாமா செய்த பின்னர் சச்சின், ஜோதிராதித்யா, மிலிந்த் தியோரா, அசோக் தன்வர் போன்றவர்களுக்கு மதிப்பு குறைந்ததாக அவர்கள் கருதினர். மத்தியில் ஒரு தலைமை இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. அசோக் தன்வர் கட்சியில் இருந்து வெளியேறி எந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.
முன்பு இருந்த தலைவர்கள் கொள்கை பார்த்தனர். ஆனால், இன்று இருக்கும் இளைஞர்கள் எளிதில் பதவிக்கு வர வேண்டும், ஆளுமை செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். முன்பு படிப்படியாக உயர்ந்து கட்சியின் உயர் பதவிக்கு வந்தனர். அந்த வகையில் ஜோதிராதித்யாவும், சச்சினும் வரவில்லை. அவர்களது தந்தையின் பின்னணியில் கட்சிக்கு வந்தவர்கள்.
இதற்காக முற்றிலும் இளைஞர்களை கட்சி ஒதுக்கி விட வேண்டும் என்பது இல்லை. அனுபவத்தை மூத்தவர்களிடம் எடுத்துக் கொண்டு, இளைஞர்களை வழி நடத்த வேண்டும். இன்றைய அரசியல் கோணம் வேறு பாதையில் செல்கிறது. இளைஞர்களின் அனுபவம் மிகவும் அவசியமாகிறது. வாய்ப்பு கொடுத்து நிரூபிக்க தவறும்பட்சத்தில் கட்சி அவர்களை ஓரம் கட்டி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மாநில அளவில் இன்றும் இளைய தலைவர்கள் கட்சிக்குள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தட்டிக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கொள்கையில் பிடித்தம் இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறாமல், போராடி தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் அவர்களுக்கு 'கை' கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.