செம ட்விஸ்ட்! கெலாட் மீது கடும் கோபத்தில் டெல்லி தலைமை! காங். தலைவர் தேர்தலில் வரும் திடீர் மாற்றம்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தானில் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பம் டெல்லி தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
"கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடியாக இருக்கே" என்ற வடிவேலு வசனத்திற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி இப்போது வரிசையாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இப்போது மாநிலத்தில் புதியதொரு குழப்பம் அரங்கேறி உள்ளது.
90’ஸ் கிட்ஸ் தான் குறி! 6 பேரை கவிழ்த்த 'கல்யாண ராணி’! இன்னும் 4 குரூப்.. அதிர வைத்த வாக்குமூலம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் புதிய தலைவரைத் தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்தலில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இதையடுத்து சோனியாவின் நம்பிக்கைக்குரியவரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் களமிறங்கத் தயாரானார். அதேநேரம் ஒருவருக்கு ஒரு பதவி என்பதால் தனது ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிருப்தி
ராஜஸ்தானில் உள்ள இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க டெல்லி தலைமை முடிவெடுத்து இருந்தது. இது கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏர்படுத்திவிட்டது. முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மறுப்பு
இதற்குப் போட்டியாக மற்றொரு கூட்டத்தை நடத்திய எம்எல்ஏக்கள், சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என 90 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அஜய் மக்கானேவும் மல்லிகார்ஜுன் கார்கேவும் அங்கு உள்ள நிலையில், ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் அவர்களை தனித்தனியாகச் சந்தித்து தங்கள் கருத்துகளைக் கூறலாம் என்றனர். இருப்பினும், அவர்களையும் சந்திக்க எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போர்க்கொடி
மேலும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னரே ராஜஸ்தான் முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும், கடந்த 2020இல் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய போது, ஆட்சியைக் காப்பாற்றிய 102 எம்எல்ஏக்களில் இருந்து தான் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது டெல்லி தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
கெலாட் பதில்
தனது ஆதரவு எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த வேண்டிய அசோக் கெலாட்டோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் எம்எல்ஏக்கள் கோபமாக உள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூலாக கூறிவிட்டார். இருப்பினும், அசோக் கெலாட்டின் ஒப்புதல் இல்லாமல் எம்எல்ஏக்கள் இந்தளவு போர்க்கொடி தூக்க முடியாது என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்து உள்ளார். இதையே அவர் டெல்லி தலைமையிடமும் கூறியதாகத் தெரிகிறது.
தலைவர் தேர்தலில் மாற்றம்?
ராஜஸ்தானில் நடக்கும் இந்த நடவடிக்கைகள் காரணமாக அசோக் கெலாட் மீது டெல்லி தலைமை கடும் கோபத்தில் உள்ளது. மிகவும் எளிதாக நடக்க வேண்டிய ஒரு விஷயத்தைக் கூட பெரிய விஷயம் ஆக்கிவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலிலும் அசோக் கெலாட்டை போட்டியிட வைக்க வேண்டாம் என்று டெல்லி தலைமை முடிவெடுத்து உள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக கமல்நாத் அல்லது வேறு நபரைத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட வைக்க உள்ளது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது.
கமல்நாத்
அதேநேரம் ராஜஸ்தான் நிலைமையைச் சமாளிக்கவே கமல்நாத்தை டெல்லி தலைமை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் தனியாகக் கூட்டம் நடத்தியது தவறு தான் என்றும் அதை அவர்கள் செய்து இருக்க கூடாது என்றும் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் அசோக் கெலாட் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்குள் ராஜஸ்தான் குழப்பத்தை முடிக்கத் தலைமை திட்டமிட்டு உள்ளதாகவே தெரிகிறது.