ப சிதம்பரத்துக்காக நடந்த போராட்டம்.. வராமல் போன முக்கிய காங்.தலைவர்கள்.. தொண்டர்கள் ஷாக்
டெல்லி: ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் நேற்று இரவு கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள். இந்த கைதை கண்டித்து இன்று டெல்லி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். இருப்பினும் முக்கிய தமிழக காங்கிரஸ் தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை. இந்த விவகாரம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.