காங்கிரஸ் தலைமை சிக்கல்..புதிதல்ல...முன்பும் இருந்தது...என்ன செய்தார் சோனியா?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பு என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பொறுப்பை கடந்த ஓராண்டாக ஏற்று நடத்தி வரும் சோனியா காந்தி தற்போது விலகுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி ஆகியோர் சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
அதேசமயம் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல் இருவரும் இன்றைய காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
தனது தாயும், கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்திக்கு உடல்நலம் சரியில்லாதபோது, பொறுப்பில் நீடிக்குமாறு வலியுறுத்துவது சரியில்லாதது என்று இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், கடிதம் எழுதிய தலைவர்களை விமர்சித்துள்ளார். கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியவர்கள் பாஜக பின்னணி கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக மறுத்துள்ளார்.
இதற்கு முன்பும் தலைமை சிக்கல் உருவாகியுள்ளது. தனது கணவரும் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், முன்னாள் பிரதமராகவும் இருந்த ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க சோனியா விரும்பவில்லை. 1997ல் வரை அந்தக் கட்சியின் உறுப்பினராக மட்டுமே நீடித்தார். இதற்கு முன்பு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்று சீதாராம் கேசரியும், நரசிம்ம ராவும் காங்கிரஸ் கட்சியை வழி நடந்திச் சென்றனர்.
1996ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் பதவியில் இருந்து விலகினார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து கேசரியை நீக்கினர். 1998ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போதிய அளவில் பணியாற்றவில்லை என்று கேசரி மீது குற்றம்சாட்டப்பட்டது. இவருடன் சேர்ந்து ஆர். குமாரமங்கலம், அஸ்லாம் செர் கான் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.
என்னது தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கா? ஷேர் செய்யப்படும் பொய் தகவல்
இதையடுத்து, 1999ல் பதவியை ராஜினாமா செய்வதாக சோனியா கூறினார். இதை பலரும் எதிர்த்தனர். சரத்பவார், பிஏ சங்மா, தாரி அன்வர் ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்தனர். ஆனால், இதை காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து தலைமைக்கு எழுதி இருந்த கடிதத்தில், ''இந்தியாவை நான் எனது நாடாக தேர்வு செய்து இருக்கிறேன். எனது இறுதி மூச்சை இந்தியாவில் தான் விடுவேன். என்னுடைய தாய் நாடு இந்தியா. எனது இருதயத்துக்கு நெருக்கமானவர்களுக்கும் இதுதான் தாய் மண்''என்று உணர்ச்சி பொங்க எழுதி இருந்தார்.
சோனியாதான் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அசோக் கேளா, திக்விஜய் சிங், மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கிரிதர் காமாங் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சரத்பவார், பிஏ சங்மா, தாரி அன்வர் ஆகிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் மூவரும் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை துவக்கினர். சரத் பவார், சங்மா, தாரிக் அன்வர் மூவரையும் வெளியேற்றிய பின்னர் தலைமை பொறுப்பை சோனியா ஏற்றார்.
இவர் தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர் பெரிய அளவில் கட்சிக்கு நெருக்கடி இல்லை. 2014ஆம் ஆண்டு தேர்தல் வரை இவரது தலைமையில் தான் இயங்கி வந்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. இன்று மீண்டும் அதே தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் வெற்றியும், தோல்வியும்தான். வெற்றி என்பது அரியணையில் அமர்ந்து இருக்க ஊக்கமளிக்கும், ஆனால், தோல்வி துவளச் செய்து விடும். இதை அறிந்தே ராகுல் காந்தி பின்வாங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.