அச்சமின்றி துணிந்து நில்லுங்கள்... காங்.தலைவர் சோனியா ஆவேசம்
Recommended Video
டெல்லி: பேராபத்தில் சிக்கி உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவரும் அச்சமின்றி துணிந்து நின்று போராட முன்வருமாறு, அந்தக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அழைப்புவிடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மத்திய அரசின் போக்கை சமூக வலைதளங்களில் மட்டும் விமர்சித்து கருத்துதெரிவித்தால் போதாது என்றும், மக்களை நேரில் சந்தித்து விளக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்கள் வீதிக்கு வந்து துணிச்சலுடன் அச்சமின்றி போராடவேண்டும் என்றும் கோரியுள்ளார். சோனியாகாந்தியின் இந்தப்பேச்சு கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும், அயர்ந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பும் வகையிலும் அமைந்திருக்கிறது. பொருளாதார விவகாரத்தில் நாடு மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாநில தலைவர்களும், நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய சோனியா, வீடு தவறாமல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும், கீழ்மட்ட நிர்வாகிகளுடன் முதல்வர்கள் உட்பட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பில் இருந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என உருக்கமுடன் பேசியுள்ளார்.
மேலும், அக்.2-ம் தேதிக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மொத்தத்தில் சோனியாவின் பேச்சும், சிந்தனையும் துவண்ட நிலையில் உள்ள கட்சியை மீண்டும் தூக்கி நிலைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறது.