80 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. உ.பி.யில் காங்கிரஸ் பரபர அறிவிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக நேற்று அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இருவரும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தனர்.
போட்டியில்லை
ரே பரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு கொடுப்பதாக இருவரும் தெரிவித்துவிட்டனர். எனவே அந்த தொகுதிகளில் அந்த இரு கட்சியினரும் போட்டியிடவில்லை.
அதிர்ச்சி
இதுவரை காங்கிரஸ் ஆதரவு வைத்திருந்த நிலையில் இரு கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இன்று லக்னோவில் கூடுகிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், தேர்தல் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனித்து போட்டி ஏன்
இந்த கூட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாததால் அகிலேஷும் மாயாவதியும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.