பாலியல் புகார் தந்த பெண் மீது கொலை முயற்சி.. உ.பி. சம்பவம் சட்டத்துக்கு புறம்பானது.. காங்கிரஸ் அமளி
டெல்லி: பாலியல் புகார் தந்த பெண் மீது கொலை முயற்சி குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தான் 16 வயதில் வேலை கேட்க சென்ற போது பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் அந்த பெண், தனது உறவினர்கள் இருவர், வழக்கறிஞருடன் ரே பரேலிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களது கார் மீது லாரி ஒன்று மோதியதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரு உறவினர்களும் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் நம்பர் பிளேட் கருப்பு மையால் அழிக்கப்பட்ட லாரி மூலம் நிகழ்ந்த விபத்து திட்டமிட்ட சதி என உறவினர்கள் கூறுகின்றனர்.
இன்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது சமாஜ்வாதி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில் இது பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இதுவாகும். எனவே இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டார்.
இதையடுத்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக அதன் சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார்.