திக்விஜய் சிங் வாக்களிக்காதது காங்கிரஸ் கட்சியினரின் அகந்தையை காட்டுகிறது.. மோடி தாக்கு
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திக்விஜய் சிங் மக்களவை தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணித்தது, அக்கட்சியினரின் அகந்தையை வெளிக்காட்டுவதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிட்டார்.
ராஜ்கர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற திக்விஜய் சிங்கிற்கு, அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தான் வாக்கு இருந்தது. ஆனால் தாம் இந்த முறை போட்டியிட்ட போபால் தொகுதியிலேயே அவர் நேற்று இருந்தார். இதனால் வாக்களிக்க தவறிவிட்டார்.
எதிர்கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு திக் விஜய் சிங்கின் வாக்கு புறக்கணிப்பு நிகழ்வு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜனநாயக கடமையாற்ற நான் அகமதாபாத் வரை சென்று வாக்களித்தேன்.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை வரிசையில் நின்று செலுத்தினார்கள். ஆனால், திக்விஜய் சிங்கிற்கு ஜனநாயகத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். போபால் தொகுதியில் வெற்றி பெறுவதிலேயே குறியாய் இருந்துள்ளார்
ராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்!
தனது நலனை மட்டுமே எதிர்பார்த்து மக்கள் நலனை புறம் தள்ளியுள்ளார் திக்விஜய் சிங். தனது ஓட்டினை கூட போடாமல் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தவறான எடுத்துகாட்டாய் அமைந்துள்ளார் திக்விஜய் சிங் என கடுமையாக சாடியுள்ளார் பிரதமர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங் பாஜக சொல்வது போல் எனக்கு பயம் என்பது கிடையவே கிடையாது. தொகுதியில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலை போல் இதிலும் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என 100% நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.