ராகுல் காந்தியை தரையில் தள்ளிவிட்ட போலீஸ்.. ஹத்ராஸ் போக விடாமல் கைது.. உ.பி.யில் பெரும் பதற்றம்
டெல்லி: 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டனர்.
Recommended Video
யமுனா ஹைவே பகுதியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனவே வெயிலுக்கு இடையே சாலையில் இருவரும், தொண்டர்கள் புடை சூழ நடந்தே சென்றனர். அப்போதும் விடாத போலீசார், ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதை மீறி அவர்கள் நடந்து செல்ல முற்பட்டபோது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.
அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் உ.பி.போலீசாரால் ராகுல் காந்தி கீழே மண் தரையில் தள்ளிவிடப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை, அருகேயுள்ள பார்முலா 1 பந்தைய டிராக் கெஸ்க் ஹவுசுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருந்தன.
ராகுல் காந்தியை பிடித்து கீழே தரையில் தள்ளி உ.பி. போலீஸ் உச்சகட்ட அராஜகம்-காங். தொண்டர்கள் மறியல்!
பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு பேசினேன். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசும்போது அவர் அழுது அப்படியே உடைந்து விட்டார். அவரது குழந்தைக்கு நீதி வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. அவரது மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கூட இந்த அரசு அனுமதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
உண்மைகள் என்ன
ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்திய நாட்டின் ஒரு மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன. இறுதியில் அந்த பெண்ணின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு கூட குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.
சோனியா காந்தி கோபம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், இரக்கமற்ற ஒரு அரசு காரணமாக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான இந்திய மக்கள் இந்த சம்பவத்தால், துக்கமும் கோபமும் அடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
பலாத்காரம்
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் கடுமையாக தாக்கி நாக்கை அறுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் நேற்று அதிகாலை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக அந்த பெண்ணின் உடலை காவல்துறை எரியூட்டிவிட்டது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. நாடு முழுக்க போராட்டங்கள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.