அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு.. குற்றவாளி வாக்குமூலத்தில் அகமது பட்டேல், சல்மான் குர்ஷித் பெயர்கள்
டெல்லி: மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி, அவரது மகன் பாகுல் நாத், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் அகமது படேல் ஆகியோர் பெயர்கள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் மோசடி வழக்கில் அடிபடத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஐபிகள் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி இடைத்தரகர்கள் மூலம் லஞ்சமாக கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின் மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜிவ் சக்சேனா என்ற சார்டர்ட் அக்கவுண்டன்டிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம், துபாயில் இருந்து இந்த வழக்கிற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவராகும். சக்சேனாவின் ரூ.385 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது.
சக்சேனா 1000 பக்கத்திற்கும் மேற்பட்ட வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் வங்கி ஸ்டேட்மென்ட்கள், ஆவணங்கள், ஆப்ஷோர் கம்பெனிகள், இமெயில் பரிமாற்றங்கள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. ஹவாலா முறையில் பல சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதை இந்த ஆவணங்கள் உறுதி செய்துள்ளன.
விவிஐபிகளுக்கு மத்திய அரசால் வாங்கக் கூடிய ஹெலிகாப்டர்களை அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த அரசியல் தலைவர்கள் சிலர் மற்றும் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு.
இந்த வழக்கில், ஆயுத டீலர் சுஷேன் மோகன் குப்தா மற்றும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ராதுல் புரி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. சக்சேனா தனது வாக்குமூலத்தில், இவ்விருவரும், அவ்வப்போது தங்களுடனான ஆலோசனையின்போது சல்மான் குர்ஷித் மற்றும் கமல் அங்கிள் என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு அரசில் உள்ள செல்வாக்கை காட்ட இவ்வாறு பேசுவார்கள். கமல் அங்கிள் என அவர்கள் கூறியது கமல்நாத்தைத்தான் என்பது எனது புரிதல் என கூறியுள்ளார்.
இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான், இந்த டீலுக்கு லஞ்சப் பணம் வாங்கியதில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று ஆகும். இந்த நிறுவனம், சுஷேன் மோகன் குப்தாவிற்கு சொந்தமானது. அது கவுதம் கைத்தான் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுஷேன் மற்றும் கவுதம் இருவரும் தங்களது உரையாடல்களின்போது, 'ஏபி' என்ற பெயரை குறிப்பிடுவார்கள். அது அகமது பட்டேல்தான்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கமல்நாத் மற்றும் சல்மான் குர்ஷித் மறுத்துள்ளனர்.