டெல்லி காங்கிரசில் சலசலப்பு...மூத்த தலைவர்கள் மவுனம்... ஓயாமல் ஒலிக்கும் குரல்!!
டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர்களால்தான் காங்கிரசுக்கு தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று இளம் தலைவர்கள் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி ஆதரவாளர்களுக்கும் இடையே காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த தலைவர்களால் தான் தற்போது காங்கிரசுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்றும், மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்றும், இதில் எந்த சமரசமும் இல்லை என்றும் இளம் தலைவர்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மன்மோகன் சிங் அல்லது வேறு மூத்த தலைவர்களோ மறுத்து பேசவில்லையாம்.
நடப்பு பாஜக அரசின் பொருளாதார மந்தம், கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் மந்தப் போக்கு, சீனாவுடன் மோதல் ஆகியவை குறித்து மூத்த தலைவர்கள் அல்லது கட்சி மேலிடம் பெரிய அளவில் குற்றச்சாட்டுக்களை வைக்கவில்லை என்று ராஜ்ய சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இங்குதான் பிரச்சனையும் துவங்கியதாம். பிரதமர் மோடியின் இமேஜை உடைக்கும் வகையில் மூத்த தலைவர்கள் யாரும் கருத்துக்களை எழுப்பவில்லை என்றும் இதை சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை- அதிமுக அரசின் மவுனம் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்: ஸ்டாலின்
இதையேதான் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் பலமுறை தெரிவித்துள்ளார். 2014 தேர்தலுக்குப் பின்னர் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்படுகிறது என்பதை கட்சியில் விவாதம் நடத்த வேண்டும். சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். கட்சிக்குள் போதிய விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் இல்லை என்ற கருத்து பரவலாக எழுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. சதவ் தனது பதிவில், ''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எவ்வாறு செயல்பட்டது. ஏன் அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களை சந்திக்கவில்லை. ஏன் மகாராஷ்டிரா, டெல்லியில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும். முழு சுயபரிசோதனை தேவை'' என்று பதிவிட்டு இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் போன்றவர்கள் வெளியேறி இருக்கும்பட்சத்தில், தற்போது இளம் எம்.பி. ராஜீவ் சதவ்வும் கேள்வி எழுப்பியுள்ளார்.