அரசு வேலை வாய்ப்பில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு.. காங்., தேர்தல் அறிக்கை
டெல்லி: 17-வது மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எதிர்ப்புக்கு உள்ளான முக்கிய திட்டங்களை, மறுசீரமைத்து தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தென்மாநிலங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாதம் ரூ.6000
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கும் திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் வகையில் 'நியாய்' திட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து.. ராகுல் வாக்குறுதி!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
அரசு வேலை வாய்ப்பில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்த தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ராகுல் உறுதி
33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, 2017 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு, நிலவியது. மகளிர் மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் உறுதியாக இருந்தார். ஆனால் எதிர்ப்பு காரணமாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது
33 சதவீத இடஒதுக்கீடு
பெண்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில், 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும், சட்ட திருத்த மசோதா 2010, மார்ச், 9ல், மாநிலங்களவைவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை, மக்களவையில், இம்மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்படவே இல்லை. கடந்த, 2014ல், மக்களவை கலைக்கப்பட்ட பின், இம்மசோதா காலாவதியாகி விட்டது. இந்தநிலையில் மீண்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் விளக்கம்
மேலும், தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன்; அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுவதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.