காங்.கின் 2 வாக்குறுதிகள்..தேச துரோகம் என பாஜக தலைவர்கள் கொந்தளிப்பு
Recommended Video
டெல்லி: தேசத்துரோக சட்டப் பிரிவை நீக்குவோம், ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மறு ஆய்வு செய்வோம், என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அதில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்குவோம் என்ற அம்சமும் அதில் இடம் பெற்றுள்ளது.
சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் சொன்னது போல் மற்ற மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி- காங்கிரஸ்
பழைய சம்பவங்கள்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்கையா குமார், மாணவ போராட்டக்காரர்கள் உமர் காலித் உள்ளிட்டோர் தேசத்துரோக சட்டத்தின்கீழ்தான் கைது செய்யப்பட்டிருந்தனர். இதற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்திருந்தன. 2015ம் ஆண்டில் பட்டிதார் போராட்டக் குழு தலைவர் ஹர்திக் பட்டேலும் தேசத்துரோக சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு வித்திட்டார்.
தொடர் சர்ச்சை
கடந்த வருடம், பீமா கோரேகான் வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் இதே சட்டம் பாய்ந்தது. குடிமக்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய 2 பத்திரிக்கையாளர்கள் மீது கடந்த ஜனவரியில் இதே சட்டம் பாய்ச்சப்பட்டது. இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் இந்த சட்டத்தைதான் நீக்கப்போவதாக கூறியுள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரம்
பிரிட்டீஷ் காலத்து சட்டமான, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்று தெளிவாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஷ்மீரில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மறு பரிசீலனை செய்வோம், காஷ்மீரில் படைகள் எண்ணிக்கையை குறைப்போம் என்றும் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது.
அருண் ஜெட்லி ஆவேசம்
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரசின் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை. சில வாக்குறுதிகள் நாட்டுக்கே ஆபத்தானவை. பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் விரும்பும் வகையில் தேர்தல் அறிக்கையில் அம்சங்கள் உள்ளன. தகுதியற்றவர்கள் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர் என்றார்.
தேச விரோதம்
உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி, தேச விரோதமானது. தேசத்திற்கு எதிராக பேசியவர்களை, எப்படி காங்கிரஸ் அரசு விடுதலை செய்யும் என்று அறிவிக்க இயலும். பாஜக தேச நலன், பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாது. தேசத்துரோக வழக்காக இருந்தாலும் சரி, ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டமாக இருந்தாலும் சரி, தேசத்தின் நலன்தான் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.