திமுகவின் வழியை பின்பற்றும் காங்கிரஸ்.. ராகுல் காந்தி நிலைப்பாட்டில் அடடே மாற்றம்.. என்ன காரணம்?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டிலும், வாக்குறுதிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டிலும், வாக்குறுதிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக நேற்று காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இது என்ன திமுகவின் தேர்தல் அறிக்கையா? இதுதான் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்த பலருக்கு தோன்றி இருக்கும். ஆம், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, திமுகவின் தேர்தல் அறிக்கை போலவேதான் இருந்தது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், தேசிய அளவில் திமுக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்பதை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உணர்த்தியது.
மாநில கட்டுப்பாடு
காங்கிரஸ் கட்சி பாஜக அளவிற்கு மத்தியில் மொத்தமாக அதிகாரத்தை குவிக்காத கட்சி. தான் ஆட்சி நடத்திய பல வருடங்களை கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் நடத்தி இருக்கிறது. அதனால்தான் என்னவோ எப்போதும் காங்கிரஸ் ஆட்சி சில மாநிலங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும். உதாரணமாக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுகவிற்கு நிறைய முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் என்ன
ஆனாலும் காங்கிரஸ், பாஜக இரண்டு ஒன்றாக இருப்பது தேசியவாத கொள்கைகளில்தான். காங்கிரஸ் கட்சியும் சில இடங்களில் மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசுக்கான அதிகாரத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களை காங்கிரஸ் கட்சியும் கூட ஆளுநர்களை, சிபிஐயை வைத்து கட்டுப்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது ராகுல் காந்தி காலத்து காங்கிரஸ் அப்படி இல்லை என்பது அவர்களின் தேர்தல் அறிக்கை மூலமே தெரிகிறது.
ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000.. தனி விவசாய பட்ஜெட்.. 22 லட்சம் வேலை.. அதிரடி காங். தேர்தல் அறிக்கை
சிறப்புகள் என்ன
உதாரணமாக பின்வரும் விஷயங்களை பார்த்தால் புரியும், காங்கிரஸ் இந்த தேர்தல் அறிக்கையில் மாநிலம் சார்ந்த நலனுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து உள்ளது. மத்திய அரசின் துறைகளை மாநில அரசுக்கு மாற்றுவது, மத்திய பட்டியலை மாநிலத்துடன் பகிர்ந்து கொள்வது, காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை, ராணுவத்தை பின்வாங்கிக் கொள்வது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து என்று மாநிலம், மாநிலம், மாநிலம் மட்டுமே காங்கிரஸ் அறிக்கையில் அதிகம் இருந்தது.
திமுக
அதே சமயம் திமுகவின் முற்போக்கு கொள்கைகளிலும் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்தியது. பஞ்சமி நிலங்களை தலித் மக்களுக்கு கொடுப்பது, தனியார் துறையில் இடஒதுக்கீடு, மத, சாதி ரீதியான மோதல்களை உடனே விசாரிப்பது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்பது என்று காங்கிரஸ் யாருமே எதிர்பார்க்காத விஷயங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ராகுல் காந்தி மாற்றம்
ராகுல் காந்தியின் அரசியல் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஒருகாலத்தில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்திய அவர் தற்போது மாநிலங்களுக்கு இடையிலான அதிகார பகிர்வு மீது அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். மாநில தேர்தலில் வரிசையாக தோல்வி அடைந்து மீண்டு வந்தது கூட ராகுலின் இந்த மாற்றத்திற்கு பெரிய காரணமாக இருந்திருக்கும்.
என்ன நடக்கும்
தமிழகம் எப்போதும் இந்தியாவிற்கு முன்னோடியாகவே இருந்திருக்கிறது. மருத்துவம், இந்தி எதிர்ப்பு, ஐடி புரட்சி என்று இந்தியா தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. அதன் ஒரு சிறிய படிதான் இந்த தேர்தல் அறிக்கை என்று கூட கூறலாம். இந்த தேர்தல் அறிக்கையில் 20% நிறைவேற்றப்பட்டால் கூட பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் அசாத்திய வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.