மகாராஷ்டிராவை போல் கூட்டணி ஆட்சி.. ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங். வியூகம்.. டெல்லியில் ட்விஸ்ட்?
டெல்லி: மகாராஷ்டிரத்தை போல் கூட்டணி ஆட்சியில் இடம் பிடிக்க டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங்கிரஸ் வியூகம் வகுப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரின் கருத்தில் இருந்து புலப்படுகிறது.
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஏராளமான நிறுவனங்கள் எக்சிட் போல் என சொல்லப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.
இந்த கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு
டெல்லியில் ஆட்சியை பிடிக்க மொத்தமுள்ள 70 தொகுதிகளில் எந்த ஒரு கட்சி 36 இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்க கட்சியே ஆட்சி அமைக்கும். அந்த வகையில் இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி ஜன்கீ பாத், ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ், டிவி9, இந்தியா டிவி, நியூஸ் எக்ஸ் நேத்தா, சுதர்சன் நியூஸ், நியூஸ் 24 உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
கணிப்புகள்
அதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 40 முதல் 68 இடங்கள் வரை கிடைக்கும் என அவை கணித்துள்ளன. அது போல் பாஜகவுக்கு 2 முதல் 28 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணித்துள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
முஸ்லீம் வாக்குகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை பழி வாங்க காங்கிரஸை காட்டிலும் ஆம் ஆத்மியை ஆதரிப்பதே புத்திசாலித்தனம் என கருதிய 60- சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் கருதியது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு காலம் காலமாக இருந்த முஸ்லீம் வாக்குகளும் கிடைத்திருக்காது என சொல்லப்படுகிறது.
கூட்டணி
மிகவும் சொற்ப மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டணி ஆட்சியிலாவது இடம் பெற வேண்டும் என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. அதற்கு அக்கட்சியின் தலைவர் அளித்துள்ள பேட்டியே சாட்சி. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி சி சாக்கோ கூறுகையில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்குமா என கேட்கிறீர்கள்.
வெற்றி
அது தேர்தல் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்படும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அதுகுறித்து முடிவு ஆலோசனை செய்வோம். கருத்து கணிப்புகள் எல்லாம் சரியாக இருக்காது என நான் கருதுகிறேன். கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்ட இடங்களை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் என்றார்.
|
கெஜ்ரிவால்
ஒரு வேளை காங்கிரஸ் கட்சி மிகவும் குறைந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் என்றே தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி தனிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பெற்றாலும் தலைநகர் டெல்லியில் ஆட்சியில் இருக்க தானாக வலிய போய் கெஜ்ரிவாலுடன் கூட்டணிக்கு பேசலாம் என தெரிகிறது.