பதவி வேண்டாம்.. ராகுல் காந்தி தொடர் பிடிவாதம்.. இடைக்கால தலைவரை நியமிக்க காங். தீவிரம்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பணிகளை ராகுல் கவனிக்காமல் இருப்பதால் அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
பாஜகவின் நெகட்டிவ் பக்கங்களை கூறி 3 மாத காலமாக பிரச்சாரம் மேற்கொண்டும் வெற்றி பெற முடியவில்லை என்பதாலும், பிரியங்காவுக்கு பொறுப்பு கொடுத்தும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை என்பதால் ராகுல் கடும் அதிருப்தி அடைந்தார். நேரு குடும்ப தொகுதியான அமேதியிலும் ராகுல் தோல்வியை தழுவினார். இதனால் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக தெரிவித்தார். அதோடு காங்கிரசின் மிக மோசமான தோல்விக்கு கமல்நாத், அசோக்கெலாட், ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் சுயநலத்துடன் நடந்து கொண்டதே காரணம் என்று ராகுல் குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், ராகுலின் ராஜினாமாவை அவர்கள் ஏற்கவில்லை.
ராகுல் ராஜினாமா செய்தால் தற்கொலைகள் நிகழும் என ப.சிதம்பரம் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மற்றும் அவரது சகோதரி பிரியங்கா, திமுக தலைவர் ஸ்டாலின், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் அவரை சமரசம் செய்து, தலைவர் பதவியில் நீடிக்க செய்ய முயன்றனர். ஆனால் ராகுல், மறுத்து விட்டார். கடந்த 18 நாட்களாக அவர் கட்சி நிர்வாகம் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஒதுங்கியே இருக்கிறார்.
ஆங்கில டிவி சேனலில் இந்தியில் பேசுவீங்களோ? வங்க மொழியில் பேசி தெறிக்கவிட்ட கார்கா சட்டர்ஜி!
இதன் காரணமாக காங்கிரஸ் நிர்வாகப் பணிகளில் குழப்பமான நிலை உருவாகி உள்ளது. இது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியிலும் சில முடிவுகளை எடுக்க முடியாத அளவுக்கு தொடர்கிறது என்று கூறுகிறார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் இந்த குழப்பங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே அக்கட்சிக்கு இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால தலைவர் நியமனம் குறித்து கடந்த முறை நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலேயே பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இறுதியாக ராகுலிடம் ஒரு தடவை பேச முடிவு செய்துள்ளனர். அதன்பிறகும் ராகுல் பிடிவாதமாக இருந்தால் மூத்த தலைவர் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்பார். இந்த இடைக்கால தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இந்த குழுவினரோடு தற்காலிக தலைவர் கலந்தாலோசித்து அதன் பின்னரே முடிவுகள் எடுக்க முடியும்.
கடந்த ஆட்சியில் காங்கிரசுக்கு மொத்தம் 44 உறுபினர்கள் மட்டுமே இருந்தனர். அப்போது அக்கட்சியின் பாராளுமன்ற மக்களவை தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே தோல்வியடைந்து விட்டதால், அந்த பொறுப்பை இம்முறை ராகுலே ஏற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ராகுலை சமீபத்தில் சந்தித்து இதுகுறித்து பேசியிருந்தார் இருபினும் சாதகமான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ராகுலின் இந்த தொடர் மவுனத்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் யார் என்பதற்கான பதில் எப்போது தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் வரும் 17ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ளது. அப்போது இந்த கூட்டத்தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, துணை சபாநாயகர் தேர்வு மற்றும் 23 முக்கிய மசோதாக்கள் தாக்கல், பட்ஜெட் தாக்கல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதனால் இந்த இரு பதவிகளும் வரும் 17 ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம், என்ன செய்யப்போகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள் என்பது வரும் வாரத்தில் தெரிந்து விடும்.