நான், எனது என எப்போதும் தற்பெருமை தான் பேசுவீர்களா? பிரதமர் மோடியின் பேட்டியை விமர்சித்த காங்கிரஸ்
டெல்லி: நான், எனது என்று பேட்டியில் தற்பெருமை பேசியுள்ள பிரதமர் மோடி, 55 மாதங்களுக்கு முன்பு அளித்த பொய்யான வாக்குறுதிகளால் நாடு வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். ராமர்கோயில் விவகாரம், துல்லிய தாக்குதல், ரிசர்வ் வங்கி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்ற தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தாமதப்படுத்துகின்றனர் என்று மோடி தமது பேட்டியில் கூறியிருந்தார்.
[பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை... நேற்றைய விலையில் விற்பனை]
கருத்து கூறிய காங்கிரஸ்
பிரதமர் மோடியின் பேட்டி குறித்து பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோடியின் பேட்டி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஊடகங்கள், பத்திரிக்கைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
அனைத்து நிகழ்வுகள்
அவரது பேட்டி என்பது ‘நான், எனது, எனது செயல்பாடு என்று மட்டுமே பேசி, தம்மை சுற்றியே அனைத்து நிகழ்வுகளும் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தான் என்கிற ஆணவத்தை மட்டுமே பிரதமர் மோடி வெளிப்படுத்துகிறார்.
மக்களின் பிரச்னைகள்
நியாயமான கேள்விகள், மக்களின் அவஸ்தைகள், அவர்களின் பிரச்னைகள் குறித்து எந்த பதிலையும் அவர் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற பேச்சுகளாலும், அவர் கூறும் பொய்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடியின் பேட்டியில் அவரது வார்த்தை ஜாலங்கள் மட்டுமே தெரிகிறது என்று கூறினார்.
அரசியலாக்குவது அவமானகரம்
பிரதமர் மோடியின் பேட்டி குறித்து காங்கிரசின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலை அரசியல் ஆக்குவது அவமானகரம். பேட்டியில் என்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுள்ளது.
துணிச்சல் உள்ளதா?
துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றம் அல்லது செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி விளக்கம் அளிக்கட்டும். இதுபோன்ற பேட்டிகளால் மக்களை முட்டாளாக்க முடியாது. மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, தன்னை மட்டும் பாதுகாக்குமாறு ராமரை மோடி பிரார்த்திக்கக் கூடாது என்றார் ஆனந்த் சர்மா.
பாஜக பதிலடி
காங்கிரசின் இந்த தொடர் விமர்சனங்களுக்கு பாஜகவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நளின் கோலி கூறியதாவது:
மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. காங்கிரசை போன்று மற்ற எதிர்க்கட்சிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றன. அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் மோடியின் பேட்டி தகர்த்துள்ளது என்று அவர் கூறினார்.