பாஜகவோடுதான் வாய்க்கா தகராறுன்னு பார்த்தா, காங்கிரசோடும் பஞ்சாயத்து.. டெல்லியில் ஆம் ஆத்மி அதகளம்
டெல்லி: பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீருடன்தான், பஞ்சாயத்து என்று பார்த்தால், காங்கிரசுடனும் டெல்லியில் கம்பு சுற்றிக்கொண்டு உள்ளது ஆம் ஆத்மி கட்சி.
டெல்லியில் உள்ள மொத்தம் 7 லோக்சபா தொகுதிகளில் நாளை, ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜக, கிழக்கு டெல்லி தொகுதி, வேட்பாளர் கௌதம் கம்பீர் தன்னை இழிவுபடுத்தி துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் கண்ணீர்விட்டு கதறியதோடு, அது தொடர்பாக புகார் பதிவு செய்துள்ளார்.
போன் அழைப்புகள்
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி, டெல்லி வாக்காளர்களுக்கு போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, அந்த கட்சி தான் டெல்லியில் அதிக தொகுதிகளை வெல்லப் போகிறது என்று கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளதாக பொய் தகவல்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஷீலா தீட்சிஷ் கடிதம்
இது தொடர்பாக வட கிழக்கு டெல்லி லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்ஷித், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தவறான கருத்து கணிப்பு முடிவுகளை, ஆம் ஆத்மி கட்சியினர் தொலைபேசி அழைப்புகள் மூலமாக மக்களிடம் பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பஞ்சாயத்துகள்
இப்படியாக, ஆம் ஆத்மி போகுமிடமெல்லாம் டெல்லியில் பஞ்சாயத்துகளுக்கு பஞ்சம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. டெல்லியில் தற்போது அறுதிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மும்முனை போட்டி
முன்னதாக, கடந்த லோக்சபா தேர்தலின் போது 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சியும் லேசுப்பட்டது கிடையாது. தொடர்ச்சியாக 15 வருடங்கள் டெல்லியில் ஆட்சி நடத்தியது காங்கிரஸ் கட்சி என்பதை மறக்க முடியாது. எனவே, இந்த மூன்று கட்சிகள் நடுவே தலைநகரில் கொடி நாட்ட கடும் போட்டி நிலவி வருகிறது.