பாங்காங்கிற்கு பறந்த ராகுல் காந்தி... காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்பல்
டெல்லி: மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல் பணிகளை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாங்காங் புறப்பட்டு சென்றுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். இதையடுத்து சோனியாகாந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது முதல் கட்சி நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார் ராகுல்.
கேரளாவில் உள்ள தனது தொகுதியான வயநாட்டிற்கு மட்டும் அவ்வப்போது சென்று வந்தார். தொகுதி மக்களை மட்டும் சந்தித்து வந்த ராகுல், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை கூட தவிர்த்தார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கே.சி.வேணுகோபால் எம்.பி. தான் சோனியாகாந்திக்கு உதவியாக காங்கிரஸ் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அந்த மாநிலங்களுக்கு சென்று ராகுல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நினைத்த நிலையில், அவர் நேற்றிரவு பாங்காங் பறந்துவிட்டார். இதனால் ராகுலின் பொறுப்புணர்வை நினைத்து அவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
சோனியாவுக்கு உடல்நலமில்லாததால் அவரால் பிரச்சாரம் செய்ய முடியாது. இதனால் ராகுல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கட்சியினர் நினைத்திருந்த நிலையில், அவரது பாங்காங் பயணம் அவர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது. ராகுல் பாங்காங் சென்றது மூத்த நிர்வாகிகளுக்கே தெரியவில்லையாம். சனிக்கிழமை இரவு விஸ்தாரா விமானத்தில் பாங்காங் சென்றுள்ள ராகுல் ஒரு வாரத்திற்குள் இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது.