எதிர்பார்ப்பு: வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு! உண்மை: வீட்டுக்கு வீடு வேலையின்மை! ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: இந்தியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் , பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்
மத்திய அரசு
இதனைத்தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து, பாஜக அரசு செய்து வரும் தவறுகளையும், பொருளாதார கொள்கையையும் குறித்து பேசினார். அதுமட்டுமல்லாமல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்தியப் பொருளாதாரம் பற்றி எந்தப் புரிதலும் இல்லை என்று ஆவேசமாக விமர்சித்தார்.
வேலையில்லா திண்டாட்டம்
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து புதிய கருத்தை ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
உலக வங்கி தகவல்
அதில் 2021ம் ஆண்டு நிலவரப்படி, 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகபட்சமாக 28.3 சதவிகிதமாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதில் குறைந்தபட்சமாக ஜப்பானில் 4.4 சதவிகிதமும், ஜெர்மனியில் 6.9 சதவிகிதமாகவும், இஸ்ரேலில் 8.8 சதவிகிதமாகவும் இருக்கிறது.
ராகுல் காந்தி ட்வீட்
அதேபோல் பாகிஸ்தானில் 9.4 சதவிதமாகவும், நேபாளில் 9.5 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 9.6 சதவிகிதமாகவும் இருக்கிறது. இவ்வளவு ஏன் கடுமையான பொருளாதார பிரச்னைகளை சந்தித்துள்ள இலங்கையில் 26.1 சதவிகிதமாக இருப்பதாக உலக வங்கி அறிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
இதனை குறிப்பிட்டு, வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு மக்கள் எதிர்பார்ப்பாகவும், மக்களின் தேவையாகவும் உள்ளது. ஆனால் உண்மையில், வீட்டுக்கு வீடு வேலையின்மை நிலையே உள்ளதாக தெரிவித்துள்ளார்.