ராகுல்காந்தி இனி பப்பு அல்ல... நாளை அவருக்கு 50-வது பிறந்தநாள்... தேசியத்தலைவராக உருவெடுத்த கதை
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்திக்கு நாளை 50-வது பிறந்தநாள்.
சிறுபிள்ளைதனமானவர், அரசியலில் குழந்தை, பப்பு, என்றெல்லாம் அவரை பாஜக உட்பட மற்ற கட்சியினரும் கேலியும், கிண்டலும் செய்து வரும் நிலையில் 50-வது வயதில் நாளை அடியெடுத்து வைக்கிறார் ராகுல்.
ராகுல்காந்தியின் 50-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளால் கொரோனா தாக்கம் காரணமாக கொண்டாட முடியவில்லை.
ஜூலை 2ல் கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு.. விழாவுக்கு அனுமதிக்காத கர்நாடக அரசு
ஆரம்பத்தில் கூச்சம்
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ராகுல் தொடக்கத்தில் அரசியல் ஆர்வமின்றி இருந்தார். காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாகாந்தி ஒற்றை மனுஷியாக கட்சியை வழிநடத்தியதுடன் இரண்டு முறை மத்தியில் ஆட்சிக்கட்டிலிலும் காங்கிரஸ் கட்சியை அமரவைத்தார். 2004 நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்யத் தொடங்கிய ராகுல், மிகுந்த கூச்சம் சுபாவம் உடையவராக இருந்தார்.
மோதல் போக்கு
அதேபோல் 2004-2014 காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த கூட்டணிக் கட்சி தலைவர்களை ராகுல் மதிக்கவில்லை என்ற புகார் அவ்வப்போது அவர் மீது எழும். இதற்கு உதாரணமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சென்னை வந்திருந்த ராகுல், கூட்டணிக் கட்சி தலைவரான கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் தன் மீதான சர்ச்சைகள், புகார்கள் என எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தனிப்பாதையில் பயணித்து வந்தார் ராகுல்.
ஆர்வமில்லை
தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டாத ராகுல்காந்திக்கு 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் அந்தப் பதவியை வைத்து மாநிலங்களில் கட்சியின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்கு மாறாக, மாநிலங்களில் செல்வாக்கு பெற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கத் தொடங்கினார். அதற்கு உதாரணமாக ஜி.கே.வாசன், ஜெகன் மோகன் ரெட்டி, என பலரையும் பட்டியலிடலாம்.
44 இடங்களில்
2014 நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, தனது பாட்டி மற்றும் தந்தையை முன்னிறுத்தி செல்லும் இடங்களில் எல்லாம் பேசினார். காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்த அன்னா ஹசாரேவுக்கு பதிலடி தரும் வகையிலோ, 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசின் சாதனைகளை பற்றியோ அவர் எங்கும் பேசவில்லை. விளைவு வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் தோல்வியை தழுவி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
அரசியல் முதிர்ச்சி
மத்திய அரசுக்கு எதிராக ராகுல் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பாஜகவினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பப்பு என்று விமர்சித்து வருகின்றனர். தேர்தல் தோல்வியும், காலம் கற்றுத்தந்த பாடமும் ராகுலை தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது. தனது நடவடிக்கைகளை மெல்ல மாற்றத் தொடங்கிய ராகுலை பார்த்து, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது, கட்சியினருடனான தொடர்பை அறுத்துக் கொள்வது என முன்பு செய்த தவறுகளை முழுமையாக கைவிட்டு விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் ராகுல்.
மோடிக்கு சரியானவர்
தொடக்கத்தில் ராகுல்காந்தியின் செயல்பாடுகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு காங்கிரஸ் மூத்த முன்னணி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்தனர். மோடிக்கு எதிராக ராகுலை முன்னிறுத்தினால் அது சரியாக இருக்குமா என தங்களுக்குள்ளே விவாதித்து வந்தனர். இந்த சூழலில் தான், 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவி ராகுல் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் அந்தப் பதவியில் இருந்த அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதால் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அரசியல் நாகரீகம்
ராகுலை பொறுத்தவரை அரசியலில் தனி நபர் தாக்குதலில் ஈடுபடாதவர். அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை முன் வைத்து தான் குற்றஞ்சாட்டுவார், விமர்சிப்பாரே தவிர ஒரு போதும் தனி நபர் விமர்சனத்தில் அவர் ஈடுபட்டதில்லை. பப்பு என்றும் அரசியல் குழந்தை எனவும் தன் மீதான கேலிகளுக்கு இடையே தனது அரசியல் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார் ராகுல். இப்போதெல்லாம் ராகுல் முன் வைக்கும் வாதங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஊடகங்களில் அது விவாதப்பொருளாகவும் மாறுகிறது.
ரஃபேல்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முந்தைய ஆட்சியில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக போர்க்குரல் உயர்த்தி மிகக்கடுமையாக எதிர்த்தார். ரஃபேல் விவகாரத்தில் தனி ஒரு நபராக மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்தார். அதற்கு பிறகு நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இதுவரை இல்லாத வகையில் ராகுலின் பேச்சு அமைந்திருந்தது.திடீரென நாடாளுமன்றத்தில் பிரதமர் இருக்கைக்கு சென்று அவரை ஆரத்தழுவி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார்.
கரை சேர்க்கும் பொறுப்பு
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நேர் எதிர் அரசியல் செய்து வரும் ராகுல்காந்தியை இனி யாரும் சிறுபிள்ளை என ஏளனம் செய்ய முடியாது. ஏனெனில் அணுகுமுறைகளை மாற்றி தன்னை ஒரு முதிர்ச்சியான தலைவர் என்ற பிம்பத்தை கட்டமைத்து வருகிறார் ராகுல். 50-வயதை அடைந்த அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் காங்கிரஸ் கட்சியை கரைசேர்ப்பது தான். சோனியா தற்போது இடைக்காலத் தலைவராக இருந்தாலும் அவரது உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. அதனை கருத்தில் கொண்டு ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.