100 கோடி தடுப்பூசி.. மத்திய அரசை பாராட்டிய சசிதரூர்... சுடச்சுட பதிலடி கொடுத்த காங்கிரஸ்!
டெல்லி: தடுப்பூசி ஒன்றே கொரோனாவை தடுக்கும் பேராயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றன. தடுப்பூசியின் பலன்களை புரிந்து கொண்ட இந்தியாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தது.
தொடக்கத்தில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக அதனை செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டிய மக்கள், பின்பு ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாநில அரசுகளும் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவித்தன.
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.. பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
100 கோடி தடுப்பூசி சாதனை
மக்களை பாதுகாப்பதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடுமையாக உழைக்க, மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க இன்று இந்தியா 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை ஊழியர்களையும், மக்களையும் பாராட்டினார். உலக சுகாதார அமைப்பும் 100 கோடி தடுப்பூசி சாதனையை நிறைவேற்றிய இந்தியாவை பாராட்டியுள்ளது.
சசிதரூர் பாராட்டு
இந்தியா முழுவதும் பா.ஜ.க எம்.பி.க்கள், பா.ஜ.க பிரமுகர்கள் மத்திய அரசுக்கும், மோடிக்கும் வாழ்த்து மழை பொழிய, காங்கிரஸ் எம்.பி சசிதரூம் மத்திய அரசை பாராட்டி தள்ளியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ''இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முதலில் கொரோனா 2-வது அலையை சரியாக மேலாண்மை செய்யத் தவறியது.
காங்கிரஸ் பதிலடி
போதுமான அளவு தடுப்பூசி இருந்திருந்தால் இதனை தடுத்திருக்கலாம். ஆனால் தற்போது இந்த தவறை மத்திய அரசு பாதியளவு திருத்திவிட்டது. எனினும் கடந்த கால தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்'' என்று கூறி இருந்தார். சசிதரூரின் பாராட்டு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சசிதரூரின் கருத்துக்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளார்.
அவமதிப்பதுபோல் உள்ளது
பவன் கேரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' சசிதரூரின் இந்த கருத்து தவறான மேலாண்மை, நிர்வாகத்தால் கொரோனா பரவலை தடுக்காமல் இதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களையும், கொரோனாவால் தற்போது அவதிப்படுபவர்களையும் அவமதிப்பதுபோல் உள்ளது. பாராட்டு பெறுவதற்கு முன் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும்தான் சென்று சேர வேண்டும்'' என்று கூறியுளளார்.