முழு பட்ஜெட்டும் மோசமில்ல.. நல்லதும் இருந்தது! வேலையின்மை பற்றி ஏன் பேசல? காங்கிரஸ் எம்பி சசி தரூர்
பட்ஜெட்டில் சில நல்ல விசயங்கள் இருந்ததாகவும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து பேசவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து இருக்கும் நிதிநிலை அறிக்கையை முழுமையாக விமர்சனம் செய்ய முடியாது என்றும், அதே நேரம் ஏழை தொழிலாளர்கள், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட அடிப்படை விசயங்கள் குறித்து பேச தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்து இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
10 முத்தான அறிவிப்புகள்.. வருமான வரி முதல்.. பான் கார்ட் வரை.. பட்ஜெட்டின் டாப் அம்சங்கள் இதோ!
எதிர்பார்ப்புடன் தாக்கல்
மத்திய பாஜக அரசின் பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டே மீதம் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பட்ஜெட் மீது மற்ற பட்ஜெட்டுகளை காட்டிலும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
புதிய வரியில் சலுகை
குறிப்பாக வரி விகிதம், வேலை வாய்ப்பு, கல்வி, விவசாயம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக வருமான வரில் சலுகை வ்ழங்கப்படுமா என்று மாத சம்பவளம் வாங்கும் நடுத்தர மக்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த சூழலில் ஆண்டுக்கு புதிய வரி திட்டத்தில் அவர் சலுகை அறிவித்து உள்ளார்.
வருமான வரி உச்சவரம்பு
ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். அத்துடன் வருமான வரிக்கான உச்சவரம்பு என்பது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது வரவேற்பை பெற்று உள்ளது.
கல்வி, சுகாதார நிதி
ஆனால், அத்தியாவசியமாக ஒதுக்க வேண்டிய கல்வித்துறைக்கு ரூ.1,128 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, சுகாதாரத்துறைக்கு ரூ.88,956 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் குறைவு என்றும் பலர் விமர்சித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு, பணவீக்கம் தொடர்பாகவும் புதிய பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
100 நாள் வேலைத் திட்டம்
அதேநேரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.89,400 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 32% குறைவாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
சசி தரூர் கருத்து
இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி, சசி தரூர், "இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற சில விசயங்கள் நன்றாக இருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சொல்ல முடியாது. ஆனால், எனக்கு சில கேள்விகள் உள்ளன. ஏழை தொழிலாளர்கள் பற்றி அவர்கள் பேசவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பற்றி வாய் திறக்கவில்லை. பணவீக்கம் குறித்தும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை." என்றார்.