விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்பி மனு தாக்கல்!!
திருவனந்தபுரம்: விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று கேரள காங்கிரஸ் எம்பி டிஎன் பிரதாபன் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதாபன் இன்று விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். விவசாய மசோதாவை எதிர்த்து பஞ்சாபில் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக, ஷிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இன்று தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பஞ்சாப், அரியானாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பஞ்சாபில் விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த கத்கர் காலன் கிராமத்தில் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அமரிந்தர் அளித்து இருந்த பேட்டியில், ''விவசாயம் மாநிலம் சார்ந்தது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில நலனுக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது'' என்றார்.
டெல்லி இந்தியா கேட்டில் இன்று காலை டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, ''எனக்கும் டிராக்டர் இருந்தால், நானும் தீ வைத்து கொளுத்தி இருப்பேன். ஏன் அடுத்தவர்கள் பற்றி கவலைப்பட வேண்டும். மாநிலங்களுக்கு என்று சிலவற்றை மத்திய அரசு விட்டு வைக்குமா என்பது சந்தேகம்தான்'' என்று தெரிவித்து இருந்தார்.
மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக்டர்கள் விளக்கம்
காங்கிரஸ் கட்சி கடுமையாக விவசாய மசோதாக்களை எதிர்த்து வருகிறது. விவசாய மசோதா புற்றுநோய் போன்றது. சிறிது சிறிதாக விவசாயிகளை விஷம் போன்று கொன்று விடும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. விவசாய மசோதாவை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநிலம் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறது.