காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒரே கட்சியாகிறதா.? திடீரென சரத் பவாரை சந்தித்த ராகுல்
டெல்லி: மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பிறகு பெரும் விரக்தியில் உள்ள ராகுல் காந்தி, கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி-க்கள் உள்ளிட்டோரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டிற்கே சென்று ராகுல் சந்தித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு அதனை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது பற்றி, இருவரும் விவாதித்திருக்க கூடும் என்று வெளியான தகவலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநில அளவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு அம்மாநில காங்கிரஸ் தலைவராக சரத் பவாரை அமர்த்த ராகுல் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விரக்தியடைந்த கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ராகுலின் அறிவிப்பை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மோடியின் புதிய அமைச்சரவையில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த அந்த 'முக்கிய' 11 பேருக்கு கல்தா!
இருப்பினும் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி கொள்வது என்ற முடிவில் உறுதியாக உள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கட்சி நிர்வாகிகள் உட்பட யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மோடி அமைச்சரவை பதவியேற்புக்கு தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் வருகை தந்திருந்தார்.
முன்னதாக நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் சந்தித்தார். பின்னர் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கையும் சந்தித்தார்.
இதன் பின்னர் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்திற்கு நேரில் சென்ற ராகுல், அவரிடம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியை சரத் பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பு குறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி தனது இல்லத்திற்கு நேரில் வந்து தம்மை சந்தித்து சென்றதாக கூறியுள்ளார். அப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், அம்மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறியுள்ளார்
ராகுல் - சரத் பவார் சந்திப்பில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இணைவு குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என சரத் பவார் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இரு கட்சி தலைவர்களும் விவாதித்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சரத் பவாரை சந்தித்த பிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் ராகுல் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசின், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.