பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்
டெல்லி: பீகார் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பலத்த பின்னடைவை சந்தித்தது.
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியின் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போக காங்கிரஸ் கட்சி பெரும் முட்டுக்கட்டையாக மாறியது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கபில் சிபல் சர்ச்சை
இந்த நிலையில்தான் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சமீபத்தில் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சல்மான் குர்ஷித் போன்ற பிற தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் ப.சிதம்பரம், தைனிக் பாஸ்கர் என்ற ஹிந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறி உள்ளதை பாருங்கள்.
ப.சிதம்பரம் கருத்து
மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதுதான் என்னை மிகவும் கவலைப் படுத்துகிறது. இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது அமைப்பு ரீதியாக காங்கிரஸ் வலுவாக இல்லை என்பதும்அடிமட்ட அளவில் காங்கிரசு பலவீனமாக இருக்கிறது என்பதும் புரிகிறது.
ரொம்ப நாள் ஆகவில்லையே
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக நெருக்கமாகச் சென்ற போதிலும் நாம் ஏன் தோற்றோம் என்பதை விரிவாக ஆலோசிக்க வேண்டும். இத்தனைக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மிகவும் அதிக நாட்கள் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. அப்படி இருந்தும், இப்போது இம்மாநிலங்களில் தோற்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
சின்ன கட்சிகளை பாருங்க
சிறிய கட்சிகளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-எம்எல், ஏஐஎம்ஐஎம் (ஓவைசி கட்சி) போன்ற கட்சிகள் கூட பீகாரில் நல்ல ரிசல்ட் பெற்றுள்ளன. அமைப்பு ரீதியாக பலமாக இருந்தால், அடிமட்ட அளவில் பலமாக இருந்தால், சாதிக்க முடியும் என்பதற்கு அவை உதாரணமாக மாறியுள்ளன. அடிமட்ட அளவில் பலமாக இருந்தால் பீகாரில் பாஜக கூட்டணியை தோற்கடித்திருக்க முடியும். இவ்வாறு, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்
அதேநேரம், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளாரே என்ற கேள்விக்கு, பதிலளித்துள்ள சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் அந்த தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.