ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
டெல்லி: சமீபத்தில் வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பில் கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாகவும் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில், ஏபிபி - சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்
எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இரு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அசாமில் பாஜகவும் கேரளா மாநிலத்தில் இடதுசாரிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அதில் ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ்
கேரளாவில் ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை. எல்டிஎஃப், யுடிஎஃப் என மாறி மாறி ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இருந்து வருகின்றன. இதனால் கேரளாவில் மீண்டும் இம்முறை ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாநிலத்தில் பிரச்சாரங்களைக் காங்கிரஸ் மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் மீனவர்களுடன் கடலில் நீச்சல் எல்லாம் அடித்தார். இருந்தாலும்கூட கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அப்படியே தான் உள்ளது.
கவர முடியவில்லை
ஏபிபி கருத்துக்கணிப்பில் கேரள மாநிலத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் இடதுசாரிகள் 83-91 இடங்கள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்னணி 47 முதல் 55 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 47 இடங்களைவிட அதிகம் என்றாலும் ஆளும் கட்சியாக மாறும் அளவுக்கு அதிக வாக்காளர்களை அக்கட்சியால் கவர முடியவில்லை.
அசாம் மாநில தேர்தல்
அசாம் மாநிலத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்திக் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. இழந்த அசாம் மாநிலத்தை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. அசாமில் தேயிலை தொழிலாளர்கள் அதிகம் என்பதால் அவர்களைக் கவரும் வகையிலேயே காங்கிரஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், அங்குப் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்திகூட, கொள்ளை லாபம் அடையும் தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை எடுத்து, தேயிலை ஊழியர்களின் தினசரி ஊதியத்தை உயர்த்துவோம் எனப் பேசியிருந்தார்.
ஆதரவு போதாதது
இருந்தாலும்கூட 2001 முதல் 2016 வரை 16 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாலோ என்னவோ காங்கிரஸ் கட்சியை நோக்கி மக்கள் அதிகளவில் செல்லவில்லை என ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாமில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 72 இடங்களில் வெற்றியைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரே காலத்தில் அசுர பலத்துடன் இருந்து காங்கிரசால் வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என ஏபிபி கூறியுள்ளது. இது கடந்த முறை பெற்ற(19 இடங்கள்) வெற்றியைவிட அதிகம் என்றாலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காங். நிலை காரணம் என்ன?
ஒரு கட்டத்தில் இந்தியாவை முழுமையாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய மாநிலங்களில் மட்டுமே ஆளும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வலுவான ஒரு தலைமையும், பாஜகவுக்கு இணையாக இறங்கி வேலை செய்யக்கூடிய அளவுக்குக் களப் பணியாளர்கள் இல்லாததுமே அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் கூட, காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது என்றும் தலைவர்கள் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.