மன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி
டெல்லி: காங்கிரஸ் கட்சி, வாஜ்பாயை மட்டுமில்லை, மன்மோகன் சிங்கை கூட மறந்துவிட்டது என்று, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது விமர்சித்தார்.
மோடி தலைமையில், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் லோக்சபா கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளை முன்னிறுத்தி, உரை நிகழ்த்தினார். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதன் மீதான விவாதத்தில் பேசிய பிறகு, இன்று மாலை பிரதமர் மோடி, பதிலுரை அளித்தார்.
அப்போது மோடி பேசியதாவது: தேசிய முன்னேற்றத்திற்கு ஒரு சிலர் மட்டுமே பங்களித்ததாக சிலர் நினைத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் அந்த சில பெயர்களை மட்டுமே மற்றவர்கள் சொல்லி கேட்க விரும்புகிறார்கள், தேசத்திற்கு பங்களித்த மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம்.
இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி
ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் மற்றவர்களின் பணிகளை காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை.
2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தவர்கள் (மன்மோகன்சிங் தலைமையிலான காங். கூட்டணி அரசு), அடல் பிஹாரி வாஜ்பாயின் நல்ல பணிகளைப் பற்றி பேசினீர்களா? நரசிம்மராவின் நல்ல பணிகளைப் பற்றி அவர்கள் எப்போதாவது பேசியிருக்கிறார்களா? இந்த மக்களவை விவாதத்தில் அவர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசவில்லை (அவையில் சிரிப்பலை).
இன்று ஜூன் 25. அவசரநிலையை பிறப்பித்தவர்கள் யார்? அந்த இருண்ட நாட்களை நாம் மறக்க முடியாது. அவசரநிலைக்கு மக்களை தள்ளிய, பொறுப்பாளர்களை மறக்க முடியாது. அதுபோன்ற நிலை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் கருத்து.
நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களை, நினைவில் கொள்வதற்கான இந்த வாய்ப்பை நாம் இழக்கக்கூடாது. காந்தியடிகளின் போராட்டங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது, ஆனால் ஒரு தேசத்தின் கொள்கையாகும். காந்தியின், 150வது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினத்தை, மிகுந்த உற்சாகத்தோடு கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி உரையாற்றினார்.