என்னடா இது காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரும் சோதனை.. எப்போது மீளுமோ.. எப்படி மாறுமோ?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு இது உண்மையில் மிகமோசமான சோதனை காலம் தான்.அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் விலகி பாஜகவுக்கு தாவி வருகிறார்கள். பல மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இல்லை. லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸின் முக்கியமான தலைவர்கள் நேரடியாக பிரதமர் மோடியை பாராட்டி மகிழ்கிறார்கள். இதில் இருந்து எப்படி காங்கிரஸ் மீளப்போகிறது.
காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இக்கடான சூழலை சந்தித்து வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இன்று பஞ்சாப், புதுச்சேரி, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.
அதேநேரம் 1980களில் வெறும் இரண்டு எம்பிக்களை மட்டும் வைத்திருந்த பாஜக இன்று பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியலும் வலிமையான மெஜரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
வலிமையை இழந்த காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களை இழந்து இப்போது சில மாநிலங்களில் மட்டுமே வலிமையாக உள்ளது. இமாச்சலம், கோவா, ஆந்திரா, மகாராஷ்டிரா, திரிபுராவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் அப்படியே பாஜகவுக்கு ஜம்ப் ஆகிவிட்டார்கள். தெலுங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவிவிட்டார்கள். வட கிழக்கு மாநிலங்களில் வலிமையாக இருந்த காங்கிரஸ் இப்போது அங்கு மொத்தமாக காணாமல் போய்விட்டது.
சிறைக்கு சென்ற சிதம்பரம்
இது போதாது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் போன்றவர்களே பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ப சிதம்பரம் சிறைக்கு போய்விட்டார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். சோனியா காந்தி தற்காலிகமாக பொறுப்பு தலைவராக பதவி வகிக்கிறார்.
காங். மோசமான நிலை
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆண்டு ஆண்டுகாலமாக வென்று வந்த அமேதி தொகுதியிலேயே தோற்றப்போனார். லோக்சபா தேர்தலில் இரண்டு முறை படுதோல்வி அடைந்துவிட்டது காங்கிரஸ். இப்படி மோசமான காலகட்டத்தில் காங்கிரஸ் பயணித்து வருகிறது.
மாற்றிய பிரதமர் மோடி
இதேபோல் தான் வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு 2004 முதல் 2014 வரை 10 வருடங்கள் பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் அந்த கட்சி முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் இரண்டு முறை அடுத்தடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. அதற்கு பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கட்சியை வலிமையாக்கி இன்று பெரிய அளவில் வளர்த்துவிட்டார்கள்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பு
எனவே ராகுல் காந்தி சொன்னது போல் எல்லோரும் ஏற்கககூடிய புதிய தலைவரை தேர்வு செய்து அவருக்கு கீழ் ஒருங்கிணைப்பை உருவாக்கி காங்கிரஸ் கட்சி செல்ல வேண்டும். வீழ்ந்து கிடக்கும் மாநிலங்களில் எல்லாம் இள ரத்தம் பாய்ச்சி பயணங்களை மாற்ற வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.