ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000.. தனி விவசாய பட்ஜெட்.. 22 லட்சம் வேலை.. அதிரடி காங். தேர்தல் அறிக்கை
Recommended Video
டெல்லி: முதல்கட்ட லோக்சபா தேர்தல் துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
ஒரு சில மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இன்றி, நாட்டு மக்களின் குரலை எதிரொலிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அமையும் என்று, ஏற்கனவே ராகுல்காந்தி தெரிவித்த நிலையில், இந்த தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இருக்க போகின்றன என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி பேசியதாவது: 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு ஆண்டுக்கு, ரூ.72000 குறைந்தபட்ச உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அம்சம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பண மதிப்பிழப்பால் பொருளாதாரம் மந்தமாகிவிட்டது. அதை சரி செய்வது எங்கள் அடுத்த நோக்கம். மோடி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். 22 லட்சம் வேலைகளுக்கு பணி நியமனம் கூட செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் அரசு அந்த வேலைவாய்ப்புகளை 2020ம் ஆண்டுக்குள் நிரப்பும்.
தொழில் துவங்க விரும்பினால் முதல் 3 வருடங்களுக்கு, எந்த ஒரு அனுமதியும் அரசிடம் பெற அவசியம் இல்லை. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்கள் 100லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் இப்போது அது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. அதை சிவில் குற்றமாக மாற்றியமைப்போம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.