இந்திய தேசிய பாதுகாப்பு.. புதிய கொள்கை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.. இதுதான் சிறப்பம்சம்!
இந்திய தேசிய பாதுகாப்பு கொள்கைகள் குறித்த காங்கிரஸ் கட்சி புதிய கொள்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு கொள்கைகள் குறித்த காங்கிரஸ் கட்சி புதிய கொள்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை அறிக்கைக்கு ''இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகள்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. ஆனால் இதில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி தேசிய பாதுகாப்பு கொள்கை குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள்.
ரபேல் விவகாரம்.. ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் வருத்தம்
யார் உருவாக்கியது
இந்தியாவின் பாதுகாப்பு படையில் வேலை பார்த்த அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவில் வேலை பார்த்த அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா தலைமையில் இந்த அறிக்கையை தயாரித்தது.
ஏன் இப்படி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய பாதுகாப்பு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மக்களுக்கு தெரிய வேண்டும். இந்திய பாதுகாப்பு உறுதி பெற வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை நாம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
சிதம்பரம் பேச்சு
இதன் வெளியீட்டு விழாவில் பேசிய காங். முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியாவின் முக்கிய பிரச்சனை வேலைவாய்ப்புதான். அதன்பின் விவசாயிகளின் பிரச்சனை. அதன்பின் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனை. ஆனாலும் கூட நாம் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தி ஆக வேண்டும். இதனால்தான் இந்த சிறப்பான பாதுகாப்பு கொள்கை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கு ''இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகள்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
என்ன சொன்னார்
அவர் தனது பேச்சில், இந்திய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு தற்போது சரியாக செயல்படவில்லை. அந்த அமைப்பிற்கு போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை. தற்போது அந்த அமைப்பிற்கு இல்லாத சுதந்திரம் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்படும். அது தனித்து இயங்க முழு அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
எப்படி இருக்கும்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகள் அறிக்கையில் இந்திய ராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பான பல கொள்கைகள் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் எல்லையில் நிலவி வரும் பிரச்சனைகள் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் பிரச்சனைகளில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்தும் இதில் நிறைய கருத்துக்கள் இடம்பெற்று உள்ளது.
முக்கிய ஐந்து அம்சங்கள்
இந்த அறிக்கை மிக முக்கியமான ஐந்து விஷயங்கள் மீது கவனம் செலுத்துவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதன்படி,
1. இந்தியாவின் எல்லையை பாதுகாப்பது.
2. உலகளாவிய விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது.
3. காஷ்மீர் போன்ற உள்நாட்டு பிரச்சனையை அமைதி முறையில் சரி செய்வது.
4. ஆயுத பலத்தை அதிகரிப்பது.
5. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.