பயமா? எனக்கா.. பின்வாங்கவே மாட்டேன்! காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து சசிதரூர் அளித்த பரபர பதில்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகுவீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் பரபரப்பாக பதில் அளித்தார்.
காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபெற உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை.
'ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்'.. பாய்ந்த பாஜக.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்.. என்னாச்சு?
3 பேர் மனுத்தாக்கல்
இதில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடுவதாக முதன் முதலாக அறிவித்தா். இதையடுத்து சோனியா காந்தியின் அதரவுடன் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முன்வரவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் களமிறங்கினார். சசீதரூர், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஜார்கண்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியும் மனு செய்தனர்.
கார்கே -சசிதரூர் இடையே போட்டி
இதில் கேஎன் திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் தற்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி என்பது மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசீதரூர் ஆகியோர் இடையே நிலவி வருகிறது. இதில் யாரும் வாபஸ் பெறாத நிலையில் அக்டோபர் 17 ல் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடந்தால் சோனியா காந்தியின் ஆதரவுடன் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் சசிதரூர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
சசிதரூர் பேட்டி
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சட்டமேதை பிஆர் அம்பேத்கர் தனது சீடர்களுடன் பவுத்த மதத்தை தழுவிய தீக்சபூமி நினைவு சின்னத்துக்கு சசிதரூர் சென்றார். அதன்பிறகு அவர் பிரசாரத்தை தொடங்கினார். சசிதரூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி சோனியா காந்தி உள்ளிட்டர்வர்கள் தன்னிடம் கூறியது பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக சசிதரூர் கூறியதாவது:
காந்தி குடும்பம் நடுநிலை
நான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். இந்த வேளையில் கட்சி தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை எனவும், அப்படி தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் எனவும் தெரிவித்தனர். இதனை மீண்டும் மீண்டும் கூறினார்கள். இதன்மூலம் அவர்கள் நேர்மையான தேர்தலை விரும்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலை பொறுத்தமட்டில் காந்தி குடும்பத்தினர் நடுநிலையாக இருக்கிறார்கள். ஏனென்றால் முறைப்படி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்து கட்சியை பலப்படுத்த விரும்புகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.
நட்புரீதியான மோதல்
இந்த வேளையில், சோனியா காந்தி உள்ளிட்டவரின் ஆதரவு என்பது மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தானே உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சசிதரூர், ‛‛இது ஒரு கட்சியில் உள்ள இருவருக்கு இடையேயான தேர்தல். இதில் பகை, போர் என எதுவும் இல்லை. மாறாக நட்புரீதியானது. நாங்கள் எங்கள் திட்டங்களை முன்வைத்து கட்சியினரிடம் ஆதரவு கோருகிறோம்'' என்றார்.
பின்வாங்க மறுப்பு
இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் இருந்து விலகுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிதரூர், ‛‛என் மீது நம்பிக்கை வைத்து பலர் ஆதரவு அளித்துள்ளனர். இவர்களை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. சாமானிய தொண்டர்கள் கட்சியில் மாற்றத்தை விரும்புகின்றனர். நான் அவர்களின் குரலாகவும், இளைஞர் காங்கிரஸின் குரலாகவும் போட்டியிடுகிறேன்'' என்றார். இதன்மூலம் எக்காரணத்தை கொண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என சசிதரூர் கூறியுள்ளார்.