ப.சிதம்பரத்தை தொடர்ந்து டிகே சிவகுமார்? அமலாக்கத்துறை முன்னிலையில் ஆஜர்.. கைது செய்ய வாய்ப்பு
டெல்லி: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார், பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் சிவக்குமார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிற கட்சியினர் கவர்ந்து இழுத்து செல்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் பணியை, பெரும்பாலும் கட்சி மேலிடம் சிவகுமாருக்குத்தான் வழங்கும்.
இதனால் பாஜக தலைவர்களுக்கும் சிவகுமாருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதேநேரம் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் சிவகுமார் அனைத்துக் கட்சிகளிலும் தனக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இருப்பினும் அமலாக்கத்துறை பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.
பண மோசடி வழக்கில் டெல்லி வந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை, நேற்றிரவு சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் இன்று மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து வேறு வழியின்றி இன்று மாலை 6.30 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜரானார் சிவக்குமார்.
எருமை திருடியதாக எம்.பி. ஆசம் கான் மீது வழக்கு.. புத்தக திருட்டு வழக்கு வேற! விடாது விரட்டும் போலீஸ்
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை பதிவு செய்த ஒரு வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முக்கிய தலைவரான சிவகுமார் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.