"பிரதமரே! 8 ஆண்டுகளா கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?" நெபோடிசம் குறித்தும் காங்கிரஸ் சுளீர் பதிலடி
டெல்லி: தேசியக் கொடி ஏற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றிய நிலையில், இதற்குக் காங்கிரஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.
தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசியிருந்தார். மேலும் ஊழலும் நெபோடிசமும் நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதாக அவர் விமர்சித்தார்.
அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவித்த தினகரன்.. அப்போ சசிகலா? - பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்
பிரதமர் மோடி
இந்நிலையில், பிரதமர் மோடியைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. 76ஆவது சுதந்திர தினத்தன்று கடந்த 8 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் குறித்து பிரதமர் மோடி விவாதிக்கவில்லை என்று சாடியுள்ளது. நெபோடிசம் குறித்து மோடி பேசி இருந்த நிலையில், நிபுணத்துவம் இல்லையென்றாலும் பாஜக அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு பதவிகள் கொடுக்கப்படுவது குறித்தே பிரதமர் விமர்சித்துள்ளதாகக் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் பதிலடி
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "பிரதமர் தான் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாமல் சொந்த வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் திணறி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளில் அவர் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் அவரது பேச்சிலும் உள்ளத்திலும் உற்சாகமோ ஆர்வமோ இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பையும் கொடுக்காத பாஜக, வரலாற்றை மட்டும் கொள்ளை அடிக்க முயல்கிறது.
வாக்குறுதிகள்
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, நாட்டில் அனைவருக்கும் வீடுகள், கருப்புப் பணத்தை மீட்பது, வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ₹15 லட்சம் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் அவரை பேசவும் விடுவதில்லை.. தூங்கவும் விடுவதில்லை போல.. இதனால் தான் அவர் சோர்வாகத் தெரிகிறார். இன்று பிரதமர் மோடி தனது வாக்குறுதி குறித்து நாட்டு மக்களிடையே விளக்குவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
மரபுகள்
ஆனால் இது தொடர்பாக எவ்வித விளக்கமும் கொடுக்காமல் பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி உள்ளார். அரசியல் பேச வேண்டிய நாள் இதுவல்ல. ஆனால், இந்த மரபுகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறது. அதுவும் பிரதமராலேயே மாற்றப்பட்டு வருகிறது. எனவே, இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.
உட்கட்சி விவகாரம்
அவர் எதோ நெபோடிசம் குறித்துப் பேசினார். அது பாஜகவின் உட்கட்சி விவகாரம் என்றே நான் நினைக்கிறேன். கிரிக்கெட் உடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒருவர் பிசிசிஐயில் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளார். வெளியுறவுத் துறையில் சேர முடியாத ஒருவரும் இப்போது முக்கிய அமைச்சராக உள்ளார். எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அவரது உள்துறை, வெளியுறவு & பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் அவர்களது மகன்கள் குறித்து என்றே நாங்கள் நினைக்கிறோம்.
ஏமாற்றம்
செங்கோட்டையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பிரதமர் தனது பொறுப்புகள் மற்றும் பதவியின் கண்ணியத்தைப் புரிந்துகொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் அனைவரையும் ஏமாற்றிவிட்டார். நாட்டின் விடுதலைக்குப் போராடிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றோரின் மதிப்பை உங்களால் குறைக்க முடியாது. சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பையும் தராத அவர்கள் வரலாற்றை மாற்ற முயல்கின்றனர்" என்று சாடினார்.