ம.பி தேர்தலில் பெரும்பான்மைக்கு இழுபறி.. மாயாவதிக்கு போனைப் போட்ட காங்கிரஸ்
Recommended Video
டெல்லி : 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெற்றி பெறுவது நாங்கள் தான் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மத்திய பிரதேச தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முடிவுகள் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸுக்கு மாறி மாறி சாதமாகி வருகின்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது.
3 முறை மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த சிவராஜ் சிங் சௌகான், 4வது முறையாக முதல்வர் அரியணையில் அமர, எதிர்கட்சிகளுக்கு கடும் போட்டி அளித்து வருகின்றார். மறுமுனையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மல்லு கட்டி வருகின்றனர்.
அதன் முன்னேற்பாடாக, பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டால் என்ன என்று நினைத்த காங்கிரஸ், கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களை போன் போட்டு அழைக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை இப்போது தொடர்பு கொண்டு வருகிறது.
மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் கமல்நாத், தேர்தல் முடிவுக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் வந்து இணையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய பிரதேச மாநிலத்தில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்களை வெற்றியடைய செய்யும் என்றும் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இம்மாநிலத்தில் பாஜக 165 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது, குறிப்பிடத்தக்கது.