கொரோனா உச்சத்திலிருக்கும்போது.. சென்ட்ரல் விஸ்டாவுக்கு 'சிறிய தொகையாக' ரூ20000 கோடி..சிதம்பரம் சாடல்
டெல்லி: கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசு சிறிய தொகையாக 20,000 கோடி சென்டரல் விஸ்டா திட்டத்திற்குச் செலவழிப்பதை விமர்சிப்பது நியாயமற்றதா எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சாடியுள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனாவில் பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு சில வாரங்களாகவே மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மோசமாகவே உள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவி வந்தது. டெல்லியில் கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு மோசமாக யார் காரணம் என மத்திய மாநில அரசுகள் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன.
சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்
அதேநேரம் கொரோனா காரணமாக நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் பெரும் சிக்கல் உருவெடுத்துள்ள நிலையிலும், மத்திய அரசு பல்லாயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடமான சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது. இதை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில், டெல்லி அரசு ஒதுக்கப்பட்ட நிதியைச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தாமல் விளம்பரங்களுக்குச் செலவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டுகிறார். இந்த விமர்சனம் நியாயமானது.
பாஜக அரசு பிரதமருக்கு புதிய வீட்டை உள்ளடக்கிய மத்திய விஸ்டா திட்டத்திற்காக 'சிறிய' தொகையாக 20,000 கோடி ரூபாய் செலவழிக்கிறது. இதைப் பற்றிய விமர்சனம் மட்டும் நியாயமற்றதா" என சாடியுள்ளார்.
கொரோனா நேரத்தில் சென்டரல் விஸ்டா கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், பாஜக தலைவர்கள் இந்த விமர்சனங்கள் நியாயமற்றது என்றே தெரிவித்து வருகின்றனர்.