ஜோதிராதித்ய சிந்தியா, மும்பை தலைவர் மிலிந்த் தியோரா அடுத்தடுத்து ராஜினாமா.. காங்கிரஸ் நிலை பரிதாபம்
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகி உள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபக் பபாரியா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர். இவர்கள், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவிகளை துறந்துள்ளனர்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்வர் பதவிக்கான ரேசில் கமல்நாத்துடன் போட்டியில் இருந்தவர், ஜோதிராதித்ய சிந்தியா. ஆனால், கமல்நாத் பக்கம் காங்கிரஸ் தலைமை சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் மிலிந்த் தியோரா இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இப்பதவியில் நியமிக்கப்பட்டவர் இவர். ஆனால், கட்சியின் மோசமான தோல்விக்கு, பொறுப்பேற்று பதவியை துறந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியை உறுதிப்படுத்த தேசிய அளவில் பங்களிப்பு வழங்குவதே எனது திட்டம். கட்சியை ஒன்றிணைக்கும் பணிக்காக, நான் மும்பை தலைமை பொறுப்பை ஏற்றேன். ஆனால், ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இந்த பதவிக்கு, ராஜினாமா செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன், என்று தியோரா கூறினார்.
அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, பதவி விலகுவதாக அறிவித்திருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதே பதவியில் நீடிப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மே 25ம் தேதி ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.