ராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.!
டெல்லி: மாநிலங்களைவை இடைதேர்தல் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்கள் கட்சி எம்.எல்.எ.க்களை பாஜக விலைக்கு வாங்கிவிடாமல் இருப்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.எ.க்களை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களைவையில் காலியாகும் இடங்களை நிரப்ப அந்தந்த மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தில் இரு மாநிலங்களவை இடங்கள் காலியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, மற்றும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி ஆகியோர் நடந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்கள் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் குஜராத் மாநிலத்தில் இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகி உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இப்போதைய நிலை படி பாஜக ஒரு இடத்தையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் நிரப்ப முடியும். இந்த உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இடைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 100 எம்.எல்.எ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 71 இடங்களும் உள்ளன. இதில் இரண்டு எம்.எல்.எ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டனர். இப்போதைய நிலையில் பாஜக தங்கள் கட்சிக்கு இரு எம்.பி. க்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் 120 எம்.எல்.எ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் அவர்களுக்கு 100 எம்.எல்.எ.க்கள் மட்டுமே இருப்பதால், காங்கிரஸ் தனது எம்.எல்.எ.க்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே கர்ாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக பிரம்ம பிரயத்தனம் செய்து வரும் நிலையில் குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தவிர்க்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இப்போது இருக்கின்ற 71 எம்.எல்.எ.க்களில் 65 பேரை உடனடியாக இடமாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. மொத்தமுள்ள 71 பேரில் சில எம்.எல்.எ.க்களுக்கு கட்சி நிகழ்சிகள் உள்ளிட்ட சில முக்கியமான நிகழ்சிகள் இருப்பதால் 65 எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்து செல்ல குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் எம்.எல்.எ.க்களை தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.