இப்ப பிரிஞ்சு பாஜகவை அடிப்போம்.. பிறகு சேர்ந்து ஆட்சியைப் பிடிப்போம்.. காங். செம பிளான்!
டெல்லி: நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இம்முறை பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இதனால் அந்த மாநிலக் கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் காங்கிரசோடு இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தொகுதிகள் குறித்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பகுஜன் சமாஜும், சமாஜ் வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
இரு கட்சிகளும் மொத்தமுள்ள 80 தொகுதிகளை இரு கட்சிகளும் தங்களுடன் இணைந்துள்ள சிறு கட்சிகளுக்கும் சேர்த்து சரி பாதியாக பங்கு வைத்து போட்டியிட உள்ளன. இதில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் சோனியாகாந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதி ஆகியவற்றில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
"சிட்டிங்" சரியில்லை.. 40% எம்.பிக்கு சீட்டு இல்லை.. புதுமுகங்கள்தான்.. பாஜக அதிரடி
பிரியங்காவால் மாற்றம்
இந்த நிலையில்தான் பிரியங்கா காந்திக்கு உ.பி யில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்குப் பிறகு உ.பி யில் அரசியல் நிலை மாறியுள்ளது. காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு காங்கிரஸ் உ.பி.யில் 22 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2014 -ல் பாஜக அங்கு பெற்ற பெருவெற்றி காரணமாக காங்கிரஸ் அங்கு வீழ்ச்சியை சந்தித்தது.
என்னா மரியாதை
இதனால்தான் அகிலேசும், மாயாவதியும் இம்முறை உ.பி யில் இரண்டு இடங்களுக்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இருந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் இடங்களில் இந்த இரு கட்சிகளும் போட்டியிடவில்லை.
இப்போது காங்கிரஸ் கட்சி உ.பி யில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இதில் அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தாமல் விடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. அனேகமாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதியையும் சமாஜ் வாடி கட்சிக்கு 3 தொகுதிகளையும் விட்டுக் கொடுக்க வாய்ப்பிருப்பதாக காங்கிரசார் கூறுகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு ஆதரவு
இதனால் தேர்தலுக்கு பின்னர் இந்த கட்சிகள் நிபந்தனைகள் அடிப்படையில் ஒன்று சேர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மாயாவதியும், அகிலேஷும் காங்கிரசை ஆதரிக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் காங்கிரசின் இந்த முடிவை தெரிந்து கொண்ட சிறு சிறு கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
சகாயம் கேட்டு கோரிக்கை
முலாயம்சிங்கின் தம்பியும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான சிவ்பால் சிங் தற்போது தனிக்கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பிரகதீஸ்ஸில் சமாஜ்வாடி லோகிய என்ற அந்த கட்சி சார்பில் அவர் பெரோசாபாதில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர்களை அணுகிய அவர் பெரோசாபாத்தில் தனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று கோரியுள்ளார். இதனையடுத்து ராஸ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் ஜோகியும் தானும் தனது மகன் ஜெயந்த் சவுத்ரியும் போட்டியிட உள்ளதால் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிருத்தாமல் இருக்குமாறு காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இந்த தொகுதிகளில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தாது என்றே தெரிகிறது.