டெல்லியில் திருப்பம்.. காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியா?.. இன்று அறிவிக்கிறார் ராகுல் காந்தி!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது.
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஒரு வழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்து வந்த பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருவான போதே இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடக்காமல் இருந்தது.
நிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்
தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இரண்டு முறைக்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் டெல்லி முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித்தான் என்று கூறுகிறார்கள்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் இந்த கூட்டணி உருவாக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நாம் ஆம் ஆத்மியுடன் பேச கூடாது. அவர்களுடன் சேர்வது எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறி இருக்கிறார். இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூட்டணி பற்றி யோசிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால் டெல்லியை சேர்ந்த மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ராகுல் காந்தியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதே சரியானது என்று அவர்கள் கூறியுள்ளனர். பாஜகவை அப்போதுதான் வீழ்த்த முடியும் என்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது என்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மே 12ம் தேதிதான் தேர்தல் நடக்க உள்ளது. 6 வது கட்டமாக நடக்கும் தேர்தலில்தான் டெல்லியில் தேர்தல் நடக்கிறது.
அதனால் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி அமைக்க நிறைய நேரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.