காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.. ராஜினாமா முடிவை கைவிடுங்கள்.. ராகுலுக்கு ஷீலா தீட்சித் கோரிக்கை
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும் என, அக்கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டது ஆனால் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. கடந்த முறை போல இம்முறையும் காங்கிரஸ் கட்சியால் எதிர்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது.
இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவி ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்ய கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பட்டியலில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் அடங்குவர்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை, திரும்ப பெற வேண்டும் என ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சரிவில் இருந்து மீண்டு, மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்திரா காந்தி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நீண்ட காலம் ஆட்சி நடத்தியுள்ளது என அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போது அது போல மீண்டும் காங்கிரஸ் கட்சியால் எழுச்சி பெற முடியும் எனவே ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ராகுல் காந்திக்கு டெல்லி மாநில காங்கிரஸ் எப்போதும் உறுதுணையாக நிற்கும்.
தற்போதைய மக்களவை தேர்தல் தோல்வியால் காங்கிரஸின் தலைவரும், கட்சியின் தொண்டர்களும் மனம் உடைந்து போக தேவை இல்லை. அடுத்து வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். எனவே தொண்டர்கள் மக்களிடம் சென்று அவர்களது நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.