மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப்போவதில்லை... காங்கிரஸ் அறிவிப்பு!
டெல்லி: மக்களவையில் போதிய எம்.பி.,க்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸுக்கு 52 இடங்களே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியாத நிலையில் உள்ளது. சுயேட்சை எம்.பி.,க்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகளிலும் அந்த கட்சி ஈடுபட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது," மக்களவையில் 52 இடங்களே உள்ளதால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப்போவதில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான 54 எம்.பி.,க்கள் ஆதரவு கிடைக்கும் வரை இந்த நிலைப்பாட்டில் தொடர முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான முடிவுகளை காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி எடுப்பார்," என்று கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 44 தொகுதிகளையே கைப்பற்றியது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோன்றே, இந்த முறையும் இரண்டு இடங்கள் குறைவாக இருப்பதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டு இருப்பது குறித்தும் ரந்தீப் சங் சுர்ஜிவாலா சில கருத்துக்களை கூறினார். அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் சிறப்பு அந்தஸ்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது கடும் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா பெற்றிருந்தது. கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா 16 சதவீதம் பங்களிப்பை பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த மார்ச் மாதமே இந்த முடிவை அமெரிக்கா அறிவித்தபோதும், மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை.
அமெரிக்காவின் அழுத்தத்தின்படி, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது. இருந்நதும், வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கி இருக்கிறது. இதன் தாக்கம் விரைவில் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும்," என்று கூறியுள்ளார்.