ராகுல் காந்தி ராஜினாமாவை வாபஸ் பெற கோரி தூக்கில் தொங்க முயற்சித்த தொண்டர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் மற்றும் அமேதி தொகுதியில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனால் காங்கிரஸ் செயற்குழு இந்த ராஜினாமாவை ஏற்கவில்லை.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ராஜினாமாவை வாபஸ் பெற வலியுறுத்தினர். ஆனாலும் தமது ராஜினாமா முடிவில் ராகுல் உறுதியாக இருந்து வருகிறார்.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அனைத்து மூத்த நிர்வாகிகளும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புகிறார். இதனால்தான் கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் கூண்டோடு கலைக்கப்பட்டன.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நேற்று கூட்டாக ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கமல்நாத் கூறியிருந்தார்.
Delhi: A Congress worker attempted suicide by trying to hang himself outside Congress Office. He says, "Rahul Gandhi should take back his resignation else I will hang myself." pic.twitter.com/AhoClvzEPk
— ANI (@ANI) July 2, 2019
அத்துடன் ராகுல் காந்தி வீடு மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பாக தொண்டர்கள் நாள்தோறும் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே உள்ள மரத்தில் ஏறிய காங்கிரஸ் தொண்டர், ராகுல் ராஜினாமாவை வாபஸ் பெற வலியுறுத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த தொண்டரை மரத்தில் இருந்து இறக்கினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.