ராகுல் ராஜினாமா ஏற்கப்படுமா? டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
டெல்லி: டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. அந்தக்கட்சி 16 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ராகுல்காந்தி காங்கிரஸ் கோட்டை என கூறப்படும் உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானியிடம் வெற்றியை பறிகொடுத்தார் ராகுல்காந்தி.
இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்!
அதிக வாக்குகள்
ஆனால் நல்வாய்ப்பாக அவர் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல்.
காரிய கமிட்டி முடிவு
அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் அதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்கும் என்றார்.
ஏற்க மறுப்பு
ஆனால் நேற்றிரவு ராகுல்காந்தி, காங்கிரஸின் மூத்த தலைவரும் தனது தாயாருமான சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சோனியா காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பார்ததுக்கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.
விவாதிக்கலாம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது குறித்து விவாவதிக்கப்படுகிறது.
கட்சியில் மாற்றம்?
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மோடியிடம் இரண்டாவது முறையாக வீழ்ந்துள்ளது. ஆகையால் கட்சியை தூக்கிப்பிடிக்க தலைமைப் பொறுப்பில் சோனியா காந்தி மாற்றம் கொண்டு வரலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.