டெல்லி தேர்தல் ரிசல்ட்டால் பாஜக செம ஹேப்பி.. நம்ப முடியலியா.. மேட்டர் இருக்கு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஷாஹீன் பாக், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) என தொடர்ந்து பிரச்சாரம் செய்திருந்தாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிட்டத்தட்ட 50 பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியபோதிலும், பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருந்தாலும், டெல்லியில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
இருப்பினும், டெல்லி தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் அடுத்த பெரிய இலக்கான 2024ஐப் பற்றி, பேச்சை துவக்கி வைத்துள்ளன.
காங்கிரஸின் சரிவுதான் இதற்கு காரணம்.
டெல்லி தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்லத் தவறிய காங்கிரஸ், இரண்டாவது முறையாக பூஜ்யம் பெற்றுள்ளது. 2015 சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட, அதன் வாக்குப் சதவீதமும் பாதிக்கும் குறைவாக சரிந்துள்ளது. 9.7 சதவீதத்திலிருந்து 4.26 சதவீதமாக அது குறைந்துள்ளது.
விஜய்க்கு ஏன் இந்த திடீர் குத்தல் குடைச்சல்.. காரணம் அதுவா.. பரபரக்கும் திரையுலகம்!
பாஜகவுக்கு மகிழ்ச்சி
இது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஒரு நல்ல செய்தி. இந்தியா மட்டத்தில், பாஜக, காங்கிரஸைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச தேவையில்லை. காங்கிரஸ் தான் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தலைமை அமைப்பாக, ஒருங்கிணைக்கும் கட்சியாக இருக்க முடியும். மம்தா பானர்ஜி அல்லது ஷரத் பவார் இந்த கூட்டணியின் தளபதிகள் போல வேண்டுமானால் செயல்பட முடியும். மொத்த இந்திய அளவில், இக்கட்சிகளுக்கு ஓட்டு வங்கி கிடையாது. திரிணாமுல் காங்கிரஸோ அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியோ தேசிய அளவில் தலைமை ஏற்று, பாஜகவுக்கு கடுமையான சவாலை முன்வைக்க முடியாது.
டெல்லிக்கான தலைவர்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். டெல்லியில் அவர் இருப்பது அவருக்கு மீடியா வெளிச்சத்தை பெற்றுத் தருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பிரச்சினையிலும் ஊடகங்களில் அவரது குரலைக் கேட்க வைக்கிறது.
அவர் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள் மற்றும் டிவி ஸ்டூடியோ விவாதங்களில் மட்டுமே. எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவராக இருக்க, கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியின் தளத்தை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.
க்ளீன் இமேஜ்
பீகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் அடுத்தடுத்து 2 வருடங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாருக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும். ஆனால், பாஜக-ஜேடியு கூட்டணி பலமாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு பீகாரில் அனைத்து தளங்களிலும் போதிய தொண்டர்கள் இல்லை. பீகாரில் நிதீஷ் குமாருக்கு க்ளீன் இமேஜ் உள்ளது. எனவே கெஜ்ரிவால், நிதீஷ் குமாருக்கு எதிராக பிராண்ட்டாக முன்னிறுத்த முடியாது.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்திலும் இதே குழப்பத்தை கெஜ்ரிவால் எதிர்கொள்கிறார். அவர் வங்கத்தில் ஆம் ஆத்மியை விரிவாக்க முயன்றால், அவர் மம்தா பானர்ஜியை தேசிய அரசியலில் தனது போட்டியாளராக எதிர்கொள்ள நேரிடும். மம்தா பானர்ஜி வங்க அரசியலை மிகவும் விரும்புகிறார். தனது சொந்தக் கொல்லைப்புறத்தில் பாஜகவிடமிருந்து ஒரு சவாலை ஏற்கனவே அவர் எதிர்கொண்டு வருகிறார். ஆம் ஆத்மியும் வலுவானால் அது பாஜகவுக்குதான் ஆதாயம். 2021ல் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
பொதுவான பிரதமர் வேட்பாளர்
எனவே பிற மாநிலங்களில் கணிசமான செல்வாக்கு இல்லாமல், கெஜ்ரிவாலை வேறு எந்த கட்சியும் கூட்டணி தலைவராக ஏற்று, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாது. மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு மற்றும் சரத் பவார் ஆகியோர் 2024 ஆம் ஆண்டில் பிரதமர் மோடிக்கு ஒரு சவாலாக இருந்த தலைவர்கள். இருப்பினும், இந்த தலைவர்கள் ஒரு பொதுவான பிரதமர் பதவிக்கான வேட்பாளரை உருவாக்க தவறிவிட்டனர். எனவேதான், 2019 லோக்சபா தேர்தலில் அவர்களால் பாஜகவுக்கு சவாலாக மாற முடியவில்லை.
ராகுல் காந்தி
எனவே, மீண்டும் காங்கிரஸை பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக கொண்டுவந்து நிறுத்தும். 2024ல் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை போட்டியாளராக நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும். அனைத்து பிராந்திய தலைவர்களும் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட ராகுல் காந்தியை தங்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காங்கிரஸ் தலைமை
2018-19ல் பாஜகவிடமிருந்து, முக்கிய மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகியவற்றைப் பறித்தது காங்கிரஸ். ஆனால் அங்கு ஆட்சிக்கு எதிரான அலை 2024ல் வீசும் வாய்ப்பு உண்டு. இது எல்லா கட்சிக்குமே இயல்பானதுதான். இந்த மாநிலங்களில் மொத்தம் 127 மக்களவை இடங்கள் உள்ளன. இதை பாஜக சாதகமாக்கும் வாய்ப்பு உள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் மோசமான தோல்வி - அது தந்திரமாக இருந்தாலும் கூட - தேசிய அளவில் காங்கிரசின் தலைமையை ஏற்க பிற கட்சிகளுக்கு தயக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதெல்லாம் அடுத்த லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும்.